பதிவு செய்த நாள்
27
நவ
2014
12:11
திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் சிறப்பு வாய்ந்த கோவிலாக உள்ள நிலையில், தற்போது மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்களில் இருந்து, கும்பாபிஷேகத்துக்காக, திருமண், தீர்த்தம் மற்றும் திருதுளா (துளசி) எடுத்து வரப்பட்டுள்ளது. யாக சாலை பூஜை, திருமஞ்சனம் ஆகியவற்றுக்கு பயன்படுத்துவதோடு, கொடிமரம், பலி பீடத்துக்கு முன், திருமண், தீர்த்தம், திருதுளா ஆகியவற்றை நிலத்துக்குள் வைத்து, சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கொடி மரத்தின் முன்புள்ள 106 திவ்ய தேச திருமண், திருநீர், திருதுளாக்களை வணங்கும் சிறப்பும், 106 திவ்ய தேசங்களுக்கு சென்று வணங்கும் பலன் கிடைக்கும் என்கின்றனர்.
எம்பெருமான் எங்கும், எப்பொருளிலும் எழுந்தருளி இருந்தாலும், குறிப்பிட்ட சில கோவில்கள் விசேஷமான பெருமை பெற்றவையாக வீற்றிருக்கிறார். அதனால், ஆழ்வார்கள், மகான்கள் அந்த புனித தலங்களுக்கு சென்று பெருமாளை வணங்கி, பாசுரங்கள் பாடியும், கிரகந்தங்கள் இயற்றியும் உள்ளனர். திவ்ய தேசங்கள் ஒவ்வொன்றும் வரலாற்று சிறப்பும், புராண, இதிகாசங்கள், தமிழ் இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளன. அந்த பெருமாள் தலங்கள் புனித நிலையில் இருந்து <உயர்ந்து, தெய்வீக நிலையை அடைந்து, திவ்ய தேசங்கள் என போற்றப்படுகின்றன. அவ்வாறு, திவ்ய தேசங்கள் 108 என குறிப்பிடப்படுகிறது. அதில், நில உலகில் பார்க்க முடியாத திருபரமபதம், திருப்பாற்கடல் ஆகியவற்றை தவிர்த்து 106 தலங்கள் நில உலகில் உள்ளன. திவ்ய தேசங்களுக்கு சென்று பெருமாளையும், தாயாரையும் தரிசிப்பது, மிகவும் சிறப்பான ஒன்றாகவும், பெரும் பேறு எனவும் பக்தர்கள் கருதி வருகின்றனர்.
சிறப்பு வாய்ந்த திவ்ய தேசங்கள் ஸ்ரீரங்கம் துவங்கி, அரிமேய விண்ணகரம், திரு அன்பில், திரு ஆதனூர், திருக்குடந்தை, திருமணிக்கூடம், திருக்கூடலூர்,ஒப்பிலியப்பன் கோவில், திருவெள்ளக்குளம் என சோழ நாட்டில் 40 உள்ளன.அதேபோல், திருக்கோவிலூர், திருவஹீந்தபுரம் ஆகியவை நடு நாட்டு திருப்பதிகளாகவும், தொண்டை நாட்டு திருப்பதிகளாக காஞ்சிபுரம்-அஷ்டபுயகரம், திருவடந்தை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருக்கள்வனூர், திருக்கச்சி, திருநின்றவூர், திருநிலாத்திங்கள் துண்டம், திருநீர் மலை, திருப்பரமேச்சுர விண்ணகரம், திருப்பாடகம், திருப்புட்குழி, திருவல்லிக்கேணி, திருவேளுக்கை என 22 குறிப்பிடப்படுகிறது.
வட நாட்டு திருப்பதிகளாக, திருக்கண்ட மென்னும் கடிநகர், திருச்சாளக்ராமம், அஹோபிலம் திருச்சிங்கவேள் குன்றம், திருவடமதுரை (மதுரா), திருப்பிருதி(ஜோஷிமட்), திருவதரியாச்ரமம் (பத்ரிநாத்) திருவேங்கடம் (திருப்பதி) என 11 குறிப்பிடப்படுகின்றன.
திருக்கடினத்தானம், திருக்காட்கரை, திருச்செங்குன்றம், திருப்புலியூர், திருமூழிக்களம், திருவல்லவாழ், திருவனந்தபுரம், திருவாட்டாறு, திருவித்துவக்கோடு என மலை நாட்டு திருப்பதிகள் 13 குறிப்பிடப்படுகின்றன.பாண்டிய நாட்டு திருப்பதிகளாக, திருக்குருகூர், திருக்குளந்தை, திருக்குறுங்குடி, மதுரை திருக்கூடல்,
திருக்கோட்டியூர், திருத்தண்கால், திருப்புல்லாணி, திருப்புளிங்குடி, திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம் என 18 குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த, திவ்ய தேசங்களின் திருமண், தீர்த்தம், திருதுளா சேகரிக்க தனி குழு அமைக்கப்பட்டு, பக்தர்கள் எடுத்து வந்துள்ளனர். டிச., 1 கும்பாபிஷேகத்தின்போது, கோவில் கொடி மரம், பலி பீடத்திற்கு அருகில் இவை வைக்கப்பட உள்ளன. எம்பெருமானின் சிறப்பு வாய்ந்த திவ்ய தேசங்களையும் இங்கு ஒருங்கிணைப்பது, இக்கோவில் சிறப்பாகும்.