பதிவு செய்த நாள்
29
நவ
2014
11:11
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சுந்தரம் ஸ்ரீ சத்ய சாய்பாபா கோவிலில், 12 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, புதிய தோரணவாயில் திறந்து வைக்கப்பட்டது.
சாய்பாபாவின் மகா சமாதி உள்ள ஆந்திரா மாநிலம், புட்டபர்த்தியில் உள்ள குல்வந்த் அரங்கின் முன் உள்ள பிரம்மாண்டமான நுழைவு வாயில் போலவே, இந்த நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டு உள்ளது. தோரண வாயிலின் இருபுறமும், யாளியும் பூதகணங்களும் தாங்கி நிற்க, உச்சிக்கோபுரத்தில் மயில்மேல் பாலமுருகன் வீற்றிருக்கிறார். பின்பக்கம் அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய பாபாவின் இலச்சினை (எம்பளம்) இடம் பெற்று உள்ளது. இந்த தோரணவாயிலை, தஞ்சையின் புகழ்பெற்ற சிற்பி, பாலசுப்பிரமணியம், வடிவமைத்து உள்ளார். புதிய தோரணவாயில் திறப்பு விழாவை முன்னிட்டு, பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. பின், நாதஸ்வரம் இசைக்க, வேதகோஷங்கள் முழங்க, ஸ்ரீ சத்ய சாய் இளைஞர் அணியினர், கையில் சாய்பாபா படத்தை ஏந்தியபடி புதிய தோரணவாயில் வழியாக நுழைந்தனர்.அவர்களை, சுந்தரம் பஜன் குழுவினர், பஜன் இசைத்தபடி பின் தொடர்ந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.