மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் செல்வபுரத்தில் கட்டப்பட்ட செல்வ விநாயகர், நவநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா, பக்தர்கள் முன்னிலையில் நடந்தது. கடந்த 27ம் தேதி பிள்ளையார் வழிபாட்டுடன் விழா துவங்கியது. முளைப்பாலிகை வழிபாடு, காப்பு அணிவித்தலுக்குப்பின், திருக்குடங்களை வேள்விச்சாலைக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். 108 மூலிகைப் பொருட்கள் படைத்து முதல் வேள்வி பூஜை செய்தனர். இரவு சுவாமியின் மேனியை பீடத்தில் பதித்து எண்வகை மருந்து சாற்றப்பட்டது. நேற்று காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை செய்தனர். கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் தலைமையில், புனித நீரை சுவாமி மீது ஊற்றி திருக்குட நன்னீராட்டுப்பெருவிழாவை நடத்தினர். பின் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் பூஜை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதமும்,அன்னதானமும் வழங்கப்பட்டது. சிறுமுகை மூலத்துறை சாந்தலிங்கர் அருள்நெறி மன்ற நிர்வாகிகள் குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் திருக்குட நன்னீராட்டு விழாவை நடத்தி வைத்தனர். ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் சம்பத்குமார், உதவி தலைவர் நாகராஜன், செயலாளர் சாமிநாதன், உதவி செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.