வீட்டில் தினந்தோறும் ஏற்றும் விளக்கை நன்கு தேய்த்து சுத்தப்படுத்தி அதற்கு குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். மற்ற விளக்குகளை வரிசையாக ஒரு பலகையிலோ தாம்பாளத்திலோ வைத்து எண்ணெய் ஊற்றி திரி போட்டு தயாராக வைக்க வேண்டும். மாலை ஆனதும் முதலில் குத்துவிளக்கை ஏற்றி, அதன் ஜோதியிலிருந்து மற்ற விளக்குகளை ஏற்ற வேண்டும். குத்து விளக்கை வாசலில் வைக்கக் கூடாது. மற்ற விளக்குகளைத்தான் வைக்கலாம். துளசி வளர்ப்பவர்கள் கண்டிப்பாக துளசிச் செடி அருகில் ஒரு விளக்கு வைக்க வேண்டும். அதே போல கிணற்றடி, மாடியில் ஈசானிய (வடகிழக்கு) மூலை இங்கும் விளக்க வைக்க வேண்டும். விளக்குகளுக்கு பொரி உருண்டை, கடலை உருண்டை நிவேதனம் செய்யலாம். இயலாதவர்கள் பாலில் சிறிது கற்கண்டு சேர்த்து நிவேதனம் செய்யலாம்.
வீட்டில் அருகில் உள்ள கோயிலில் சொக்கப் பனை கொளுத்தும் வழக்கம் இருந்தால் சொக்கப் பனை கொளுத்தும் நேரம் ஒரு விளக்கை ஏற்றி வானத்தை நோக்கி காட்டி, நான் ஏற்றும் இந்த விளக்கால் எல்லா உயிர்களுக்கும் போகும் பாதையில் வெளிச்சம் கிடைக்கட்டும் என வேண்டிக் கொள்வது சிறப்பு.