சபரிமலை :மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறந்த 22 நாட்களில் வருமானம் ரூ.77.25 கோடியாக உயர்ந்துள்ளது.மண்டலபூஜைக்காக சபரிமலை நடை நவ., 16-ம் தேதி திறக்கப்பட்டது. 17-ல் மண்டலகாலம் தொடங்கியது. அன்று முதல் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் தேவசம்போர்டின் வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 22 நாட்களில் மொத்த வருமானம் ரூ. 77 கோடியே 25 லட்சத்து 7ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி ரூபாய் அதிகமாகும்.அதிகபட்சமாக அரவணை விற்பனையில் ரூ. 31 கோடியே 33 லட்சத்து 55 ஆயிரத்து 840 (கடந்த ஆண்டு ரூ.26.54 கோடி) கிடைத்துள்ளது. காணிக்கை ரூ. 27 கோடியே 65 லட்சத்து 71 ஆயிரத்து 451யும் (ரூ.23.27 கோடி), அப்பம் விற்பனை ரூ. 5.76 கோடியும் (ரூ.5.53 கோடி) கிடைத்துள்ளது. இதனை சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: அரவணை தற்போது 8 லட்சம் டின் ஸ்டாக் உள்ளது. கூட்டம் அதிகமாக வருவதால் ஒரு பக்தருக்கு அதிகபட்சம் 50 டின் என கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரவணை உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடு நடக்கிறது. அப்பம் தேவையான அளவு தயாரிக்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்படாது. சமீபத்தில் வந்த சர்க்கரையின் நிறம் சரியாக வராததால்தான் அதன் தரம் பரிசோதிக்க அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கை வந்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும், என்றார்.