சபரிமலை நிலக்கல்லில் யானைகள் கூட்டம்: பக்தர்கள் அச்சம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2014 10:12
சபரிமலை: நிலக்கல்லில் திடீர் திடீர் என இறங்கி வரும் யானை கூட்டத்தால் வெளிமாநில பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகள் வானக நிறுத்தம் பகுதிக்கு வராமல் இருக்க எல்லையில் பெரிய குழிகள் தோண்ட வனத்துறை பரிந்துரைத்துள்ளது.சபரிமலை செல்லும் பாதையில் முக்கிய இடைதங்கும் இடம் நிலக்கல். பஸ், வேன் போன்ற பெரிய வாகனங்கள் இங்குதான் நிறுத்தப்படுகிறது. இது போல பம்பையில் வாகனங்கள் நிறுத்தும் இடம், நிரம்பி விட்டால் அனைத்து வாகனங்களும் இங்குதான் திருப்பி அனுப்பப்படுகிறது. நிலக்கல்--பம்பை இடையே 20 கிலோ மீட்டர் துாரம் உள்ளது. சபரிமலையின் முக்கிய இடைதங்கும் இடமாக நிலக்கல்லை மாற்றுவதற்கு தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஆந்திரா, கர்நாடகா, தமிழக மாநில அரசுகள் கட்டடம் கட்டி தகவல் மையம் தொடங்க நிலம் கொடுக்க தேவசம்போர்டு முன்வந்துள்ளது. இந்நிலையில் இங்கு அடிக்கடி யானை கூட்டம் வருவது பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் 16 யானைகள் நிலக்கல் வாகன நிறுத்தம் பகுதிக்கு அருகே வந்தது. தகவல் அறிந்து வனத்துறை ஊழியர்கள் வெடிகளை வெடித்து யானைகளை விரட்டினர். இந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் என்பதால் அதை ஒட்டிய பகுதியில் பெரிய குழிகளை தோண்டும்படி தேவசம்போர்டுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.