ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதரித்ததும், அவளுக்கு கோதை எனப் பெயரிட்டார் அவளது வளர்ப்புத்தந்தை பெரியாழ்வார். கோதை என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு.
காம் ததாதி இதி கோதா காம் தததே இதி கோதா
என்ற ஸ்லோகம் இதனை விளக்கும். காம் என்றால் நல்ல வாக்கு. நல்வாக்கு தருபவள், நல்வாக்கு உடையவள் என்று இதற்கு பொருள். கிராமங்களில், கோடங்கி என்ற இனத்தவர் நல்வாக்கு சொல்லு ஜக்கம்மா என ஒரு வாத்தியத்தை ஒலித்தபடியே வீடுகளுக்கு வருவார்கள். உலகத்தில், நாம் நல்லதைக் கேட்பது அரிதாகிப் போய் விட்டது. இன்று எந்த ஊரில் என்ன விபத்து? நம்மை ஆள்பவர்கள் நேற்று அடித்த கொள்ளை எவ்வளவு? என்ற துரதிர்ஷ்டமான தகவல்களையே நாம் கேட்கிறோம். இந்த நேரத்தில் கோடங்கி சொல்லும் நல்வார்த்தை ஆறுதலாக இருக்கும். ஆண்டாளை வணங்கினால், அவளும் நல்வாக்கு சொல்லி நம்மை வாழ்த்துவாள். அவள் நல்வாக்கு உடையவள் என்பதால், நல்லதைச் சொல்லியே நமக்கும் அருள் செய்வாள்.