பதிவு செய்த நாள்
16
டிச
2014
05:12
திருநள்ளார்: திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழா, வெகுவிமர்சையாக நடந்தது. பகல் 2;43 மணிக்கு, துலாம் ராசியில் இருந்து விருச்சக ராசிக்கு சனி பெயர்ச்சி அடைந்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், திருநள்ளார் மூழ்கியது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில், உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சனி பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடந்தது. விழாவை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சனிஸ்வர பகவானுக்கு பால், மஞ்சள், சந்தனம், பன்னீர், பழங்கள் மற்றும் வாசன திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை 11:00 மணிக்கு மீண்டும் சனிஸ்வர பகவானுக்கு மகா அபிஷேகம் செய்து, தீபாரனை காண்பிக்கப்பட்டது.
தங்க காக்கை வாகனத்தில் சனிஸ்வர பகவான்: விழாவை முன்னிட்டு, கோவில் வசந்த மண்டபத்தில் நேற்று இரவு சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
நளன்குளத்தில் நீராடல்: திருநள்ளார் சனி பரிகார ஸ்தலமாக விளங்குவதால், இக்கோவிலின் நளன் குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி, தங்களது பழைய ஆடைகளை குளத்தில் விட்டு, சனிஸ்வர பகவானை தரிசனம் செய்தால், சனி தோஷத்தினால் ஏற்படும் கஷ்டங்கள் குறையும் என்பது ஐதீகம். அதனால், நேற்று இரவு முதல் நளன்குளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடி சனிஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் நளன் குளத்தில் குளித்ததால், பக்தர்களின் வெள்ளத்தில் நளன்குளம் மூழ்கியது. நளன்குளத்தைச் சுற்றி 100 நிரந்தர கழிப்பறைகள், 200 தற்காலிக கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டிருந்தது.
அலைமோதிய மக்கள் கூட்டம்: சனிஸ்வர பகவானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் காலை முதல் திருநள்ளார் வர துவங்கினர். இதனால், கோவிலைச் சுற்றியுள்ள வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு வீதிகள் அனைத்தும், மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. கோவில் வளாகம், நளன்குளம், மாடவிதி உள்ளிட்ட 95 இடங்களல் கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு, ஐ.ஆர்.பி., ஊர்காவல்படை என 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சாமி தரிசனம்: சனிபகவானை தரிசனம் செய்ய 500 மற்றும் 200 ரூபாய் கட்டண தரிசனம், தர்ம தரிசனம், வி.ஐ.பி.,க்கள் என 4 வழிகளில் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் தர்ம தரிசனத்திற்கு 2 கிலோ மீட்டர் துõரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வி.ஐ.பி., வருகை: வேளாண்துறை அமைச்சர் சந்திரகாசு, சமூக நலததுறை அமைச்சர் ராஜவேலு, உள்ளாட்சத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் சிவா, விஸ்வேஸ்வரன், கலெக்டர்கள் வல்லவன், சுந்தரவடிவேல், போலீஸ் ஐ.ஜி.பிரவீர்ரஞ்சன், புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திராகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.