பதிவு செய்த நாள்
17
டிச
2014
09:12
சின்னமனூர்: தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் சனிப்பெயர்ச்சி பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுயம்பு மூலவரை தரிசித்தனர். குச்சனூரில் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோயில் உள்ளது. சுரபி நதியின் மேற்கு கரையில் உள்ள இக்கோயில் மூலவர் ’அனுக்கிரக மூர்த்தியாக’ அருள்பாலிக்கிறார்.
சனிதிசை நடப்பவர்கள், சனிபார்வை உள்ளவர்கள் சுரபி நதியில் நீராடி, எள் விளக்கேற்றினால் உக்கிரப்பார்வை குறையும் என்பது ஐதீகம். நேற்று மதியம் 2:43 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்தார். பெயர்ச்சியான நேரத்தில் தலைமை அர்ச்சகர் திருமலைஜெயபால், முத்து ஆகியோர் மூலவருக்கு தீபாராதனை காட்டினர். பக்தர்கள் எள் தீபம் ஏற்றி வழிபட்டனர். சுரபி நதியில் நீராடிய பக்தர்கள் கொடிமரத்தை ஒட்டிய பீடத்தில் காகத்திற்கு அன்னமிட்டனர். நேர்த்திக்கடனாக பொரி, உப்பு படைத்தனர்.
மகனுக்காக பெண்களுக்கு அடி: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் பிரதீப் சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது பாதை ஏற்படுத்தித்தர பெண் பக்தர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். இலவச தரிசனத்திற்கு 4 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர். வி.ஐ.பி., ’பாஸ்’ வரைமுறையின்றி வினியோகிக்கப்பட்டதால் அதற்கான வரிசையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்புகள் சேதம் அடைந்ததால் பக்தர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் பெண் போலீசார் சிரமப்பட்டனர். பூஜைகளை அனைவரும் காணும் வகையில் ’எல்.இ.டி.,’ அகன்ற திரைகள் அமைக்கப்பட்டு ’டிவி’ இருந்தன. அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.