பதிவு செய்த நாள்
17
டிச
2014
10:12
திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில், சனிப் பெயர்ச்சி விழா, நேற்று விமர்சையாக நடந்தது. லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால், திருநள்ளார், தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இங்கு, இரண்டரை ஆண்டுக்கு, ஒருமுறை நடக்கும் சனி பெயர்ச்சி விழா நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறந்து, சனீஸ்வர பகவானுக்கு பால், மஞ்சள், சந்தனம், பன்னீர், பழங்கள் மற்றும் வாசனை திரவிய அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை 11:00 மணிக்கு, மகா அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. பகல் 2:43 மணிக்கு, துலாம் ராசியில் இருந்து, விருச்சக ராசிக்கு, சனி பெயர்ச்சி அடைந்த நேரத்தில், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள், கோஷங்களை முழங்கி வழிபட்டனர். கோவில் வசந்த மண்டபத்தில், நேற்று முன்தினம் இரவு, சனீஸ்வர பகவான் தங்க காகம் வாகனத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
கோவில் நளன் குளத்தில், நல்லெண்ணெய் தேய்த்து நீராடி, சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தால், தோஷங்கள் நீங்கி, சங்கடங்கள் குறையும் என்பது நம்பிக்கை. நேற்று முன்தினம் இரவு முதலே, நளன் குளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடினர். நளன் குளத்தை சுற்றி, 100 நிரந்தர கழிப்பறைகள், 200 தற்காலிக கழிப்பறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. சனீஸ்வர பகவானை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், கோவில் வளாகம், நளன் குளம், மாட வீதி உள்ளிட்ட, 95 இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்தனர்.
சனி பகவானை தரிசிக்க, 500 மற்றும் 200 ரூபாய் கட்டணம், தர்ம தரிசனம், வி.ஐ.பி.,க்கள் தரிசனம் என, நான்கு வழிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தர்ம தரிசனத்திற்கு, இரண்டு கி.மீ., தூரத்துக்கு, வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். தமிழகம், புதுச்சேரியில் இருந்து, அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் பலர், தரிசனத்துக்கு வந்திருந்தனர்.
கல்பட்டு: விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தில், 21 அடி உயர சனீஸ்வர பகவான் சிலை உள்ளது. இங்குள்ள கோவிலில், சனிப் பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்தனர். முன்னதாக, கோவிலில் நடந்த சிறப்பு பரிகார பூஜையில், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை: திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிகாட்டில், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற, அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. மேற்கு நோக்கி அமர்ந்த நிலையில், சுவாமி அருள்பாலிக்கிறார். சனீஸ்வர பகவான், கையில் கலப்பையுடன், பொங்கு சனீஸ்வரராக அருள்பாலிக்கிறார். சனிபெயர்ச்சியையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.