திருநெல்வேலி: கேரள மாநிலம் அச்சன்கோயில் ஐயப்பன் கோயிலில் மகோத்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
கேரள மாநிலம் அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில், நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 22 கி.மீ, தொலைவில் உள்ளது. ஐயப்பனின் படைவீடுகளில் ஒன்றான இக்கோயில், பரசுராமன் பிரதிஷ்டை செய்த ஐந்து கோயில்களில் ஒன்று என கருதப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மகோத்சவ திருவிழா நடைபெறும். இத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் முன் உள்ள தங்கக் கொடிமரத்தில் தந்திரி கண்டரரு மோகனரு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் தங்கக்கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து திரு ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தன. கேரள, தமிழக பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தினமும் காலை, மாலை வேளைகளில் கருப்பன் துள்ளல், மதியம், இரவில் அன்னதானம் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 25ம் தேதி பகல் 11மணிக்கு தேரோட்டம், 26ம் தேதி ஆராட்டு விழா நடக்கிறது. மறுநாள் மகோத்சவ திருவிழா நிறைவு விழா நடக்கிறது.