பதிவு செய்த நாள்
18
டிச
2014
12:12
வாழ்விற்கு தேவை நம்பிக்கை!
வாழ்வில் நேர்மையாய் நடந்தவர்கள், இரக்க குணமுள்ளவர்கள் ஆண்டவர் முன்னால் ஒருநாள் நிறுத்தப்படுவார்கள். நான் பசியோடு இருந்தேன். எனக்கு உணவளித்தீர்கள், தாகமாய் இருந்தேன். எனக்கு தண்ணீர் கொடுத்தீர்கள் என ஆண்டவர் அவர்களிடம் சொல்வார். உடனே தர்மம் செய்தவர்கள் ஆச்சரியத்துடன், எப்போது நீர் பசியாய் இருந்தீர். எப்போது நீர் தாகமாய் இருந்தீர், என கேட்பர். அப்போது கடவுள், "மண்ணுலகில் எளியவர் ஒவ்வொருவருக்கும் செய்த உதவி என்னை முன்னிறுத்தி செய்ததாக அர்த்தம்,” என பதிலளிப்பார். இரக்கம் என்பது பிறரின் தகுதியைப் பார்த்தோ அல்லது தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே உதவ வேண்டும் என்ற எண்ணத்தினாலோ ஏற்படக் கூடாது.
உதவி தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள் தங்களை தாங்களே தாழ்த்திக்கொள்வதும், தயக்கத்தோடு பின்வாங்குவதும், தங்கள் தலைஎழுத்தை நொந்துகொண்டு வாடுவதும் நீடித்து வருகிறது. ஆனால், இவர்களில் சிலர்தான் தொடர்ந்து போராடி வாழ்க்கையின் உன்னதநிலையை சிரமப்பட்டு எட்டி பிடிக்கின்றனர். இதிலிருந்து முயற்சி என்பது வாழ்வின் அத்தியாவசியத் தேவை என்பது புரிகிறது.
இதோ ஒரு சம்பவம். ஒருசமயம், மக்கள் கூட்டத்தின் மத்தியில் இயேசு நடந்து சென்றபோது, ரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண், அவரது ஆடையைத் தொட்டால் குணமடைந்து விடலாம் என்ற எண்ணத்தோடு, கூட்டம் இடித்த நிலையிலும், ஒவ்வொரு அடியாக முன்னேறிச் சென்று அவரது ஆடையைத்தொட்டாள். திரும்பி பார்த்த இயேசு, அவளது மனஉறுதி கண்டு அதே இடத்தில் குணப்படுத்தினார். நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும் என்பது இதிலிருந்து புரிகிறது.