மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள். திருப்பாவை பாடல் 3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: வாமனமூர்த்தியாக விண்ணையும் மண்ணையும் தன் திருவடியால் அளந்த உத்தமன் திருமால். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு பூக்கள் சாத்தி வழிபடும் முன் நீராடச் செல்வோம். இந்த பாவை விரதம் இருப்பதால் உலகம் முழுவதும் மாதம் மும்மாரி மழை பொழியும். தண்ணீர் இல்லாத குறை நீங்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலில் துள்ளி விளையாடுவது கண்கொள்ளாக் காட்சியாய் இருக்கும். குவளை மலர்களில் வண்டுகள் தேன் குடிக்க வந்து மயங்கிக் கிடக்கும். வள்ளல் போல பசுக்கள் பாலை தாராளமாக வழங்கும். வற்றாத செல்வம் பெருகும்.
திருவெம்பாவை பாடல் 3
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய் பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோ எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய் பொருள்: முத்துப்பல் அழகியே! நாங்கள் வரும் முன்பே சிவனை வணங்க நீ தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன், இனியவன் என்றும் சொல்வாய். இன்றோ தூங்குகிறாய். கதவைத் திற,” என்று தோழியை அழைத்தனர் பெண்கள். தூங்கியவளோ, "தெரியாமல் தூங்கியதற்காக, கடுமையாகப் பேசாதீர்கள். நீங்கள் பக்தி அனுபவம் மிக்கவர்கள். எனக்கோ அது இல்லை,” என வருந்தினாள். அவளிடம் தோழியர், "சிவன் மீது உனக்குள்ள தூய அன்பையும், தூய மனத்தினரால் மட்டுமே சிவனை வணங்க முடியும் என்பதையும் நாங்கள் அறிவோம். நீ சீக்கிரம் வா என்றே அவசரப்படுத்துகிறோம்,” என்றனர்.