சபரிமலை:சபரிமலையில் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் போஸ்ட் ஆபீஸ், பக்தர்கள் தவறவிடும் முக்கிய அடையாள அட்டைகளை அவர்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கும் பணியை செய்து வருகிறது.சபரிமலை மற்றும் பம்பையில் போஸ்ட்ஆபீஸ் செயல்பட்டு
வருகிறது. சன்னிதானத்தில் மாளிகைப்புறம் கோயிலின் பக்கத்தில் இது செயல்படுகிறது. இதன் பின்கோடு எண் 689713. இங்குள்ள ஆவணங்களின் படி 1984-ல் இந்த இந்த போஸ்ட் ஆபீஸ் தொடங்கப்பட்டுள்ளது. இதன் டெலிபோன் எண் 04735 202130.
சாதாரணமாக எல்லா போஸ்ட்ஆபீசுகளிலும் உள்ள வசதி இங்கும் உள்ளது. ஸ்டாம்புகள், பதிவு தபால், விரைவு தபால், மணியார்டர் என அனைத்து வசதிகளும் உள்ளது. தொடங்கிய நாள் முதல் தினமும் தலைச்சுமடாகதான் தபால்கள் வருகிறது. தலைச்சுமடு கொண்டு வருபவர்களும் மத்திய அரசின் ஊழியர்கள்தான்.
தினமும் காலை ஒன்பது மணிக்கு மெயில் தயார் செய்யப்பட்டு 9.30 மணிக்கு சன்னிதானத்திலிருந்து பம்பைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து 12 மணிக்கு பத்தணந்திட்டைக்கு பஸ்சில் அது அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் பம்பை வரும் மெயிலை அந்த ஊழியரே தலையில் சுமந்து சன்னிதானம் கொண்டு வருவார். மாலையில் வந்து சேரும் இந்த தபால் இரவு எட்டு மணிக்குள் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டு விடும்.
சபரிமலையில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகமாக மணியார்டர்கள் அனுப்புகின்றனர். இதற்காக ஐஎம்ஓ என்ற இன்ஸ்டன்ட் மணியார்டர் இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் ஊருக்கு பணம் அனுப்ப முடியும்.
நவ.17 முதல் டிச.,17 வரை இங்கிருந்து 15 லட்சம் ரூபாய் வரை மணியார்டர் அனுப்பப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் மணியார்டர் அனுப்ப 120 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
பணம் இங்கிருந்து அனுப்பிய அடுத்த அரை மணி நேரத்தில் குறிப்பிட்ட ஊரில் பெற்றுக்கொள்ள முடியும்.பெரும்பாலும் வெளிமாநிலங்களில் இருந்து சுவாமி ஐயப்பன் பெயருக்குதான் அதிக கடிதங்கள் வருகிறது. பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட மங்கள நிகழ்ச்சிகளுக்கு ஐயப்பனுக்கு கடிதங்கள் அனுப்புகின்றனர்.
இந்த கடிதங்கள் கோயில் நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். மண்டல மகரவிளக்கு காலத்தில் மட்டுமே சபரிமலை போஸ்ட் ஆபீஸ் செயல்படும். இதர காலங்களில் பம்பை போஸ்ட் ஆபீஸ் செயல்படும். இது சாதராண போஸ்ட் ஆபீஸ்களை போல விடுமுறை நாட்களை தவிர்த்து ஆண்டு முழுவதும் செயல்படும். பம்பை போஸ்ட் ஆபீசுக்கு சீசன் காலத்தில் பின்கோடு 689714. சீசன் அல்லாத காலத்தில் இது வடசேரிக்கரையின் கிளை போஸ்ட் ஆபீசாக மாறிவிடும். அப்போது அதன் பின்கோடு எண் 689662. சீசன் இல்லாத காலங்களில்
கடிதங்கள் இருந்தால் இங்குள்ள போஸ்ட்மேன் மலையேறி வந்து தபால்களை விநியோகிப்பார். மேல்சாந்தி மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு எல்லா நாட்களிலும் உள்ளதால் பெரும்பாலான நாட்களிலும் தபால் இருக்கும் என்கின்றனர் சன்னிதானம் போஸ்ட் ஆபீஸ் ஊழியர்கள்.இதுபோல பக்தர்கள் தவறவிடும் லைசென்ஸ் போன்ற முக்கிய அடையாள அட்டைகள் போன்றவற்றை இங்கிருந்து அனுப்பும் சேவையும் இங்கு செய்யப்படுகிறது.
அனுப்பப்படும் தபாலுக்கு உரிய கட்டணத்தை செலுத்தி அந்த நபர் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கீழே கிடக்கும் முக்கிய அடையாள அட்டைகளை பக்தர்கள் எடுத்து போடுவதற்காக சன்னிதானத்தில் இரண்டு இடங்களில் தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பக்தர்கள் சேவையில் உள்ள போஸ்ட் ஆபீஸ், தபாலில் பிரசாதம் அனுப்பும் சுவாமி பிரசாதம் திட்டத்தை நிறுத்தியது பக்தர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.