பதிவு செய்த நாள்
19
டிச
2014
11:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், இரண்டாம் பிரகார மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி துவங்கி, நடந்து வருகிறது.
காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கி வரும் வைணவ தலங்களில், வரதராஜ பெருமாள் கோவில் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்த கோவிலில், கடந்த 2012ம் ஆண்டு, முக்கிய சன்னிதிகளில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.அதன் பிறகு விடுபட்ட பணிகளை துவங்க, கோவில் நிர்வாகம், இந்து அறநிலையத் துறையிடம் நிதி கோரியிருந்தது. இந்த பணிக்கான அனுமதியும், நிதியும் ஒதுக்கப்பட்ட தால், இம்மாதம் முதல் வாரத்தில் சீரமைப்பு பணிகள் துவங்கின. கோவில் இரண்டாம் பிரகாரம் மண்டபத்தின் மேல்தளம், வசந்த
மண்டபம் மேல்தளம் ஆகியவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இருந்தது போல் பழமை மாறாமல், சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம், கற்றாழை போன்றவற்றால்
சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. சீரமைப்பு பணிகள், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இந்த பணிகள், வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது, என, கோவில் நிர்வாக அதிகாரி தியாகராஜன் தெரிவித்தார்.