பதிவு செய்த நாள்
20
டிச
2014
11:12
ஈரோடு: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக, ஈரோடு, பத்ரகாளியம்மன் கோவில் மண்டபத்தில், 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. (21ம் தேதி), அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு வ.உ.சி., பூங்கா மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில், வார வழிபாட்டு குழுவினர் சார்பில், 28வது ஆண்டாக, லட்டுகள் வழங்கப்படுகிறது. இதற்காக, 50 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யும் பணி, பக்தர்கள் மூலமாக நடந்து வருகிறது. இதுகுறித்து, வழிபாட்டுக் குழு தலைவர், சிற்றரசு கூறியதாவது: ஈரோட்டில் சுயம்புவாக உருவான, வ.உ.சி., பூங்கா ஆஞ்சநேயர் கோவில் பிரபலமானது. ஈரோடு மட்டுமின்றி, சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுமன் ஜெயந்தி அன்று, கோவிலுக்கு வருவர். பக்தர்களுக்கு வழங்குவதற்காக, வாரவழிபாட்டுக்குழு சார்பில், பிரசாதம் வழங்க, மூன்று நாட்களாக லட்டு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. உபயதாரர்களின் பங்களிப்பால், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில், இந்தாண்டு, 50 ஆயிரம் லட்டு வழங்கப்பட உள்ளது. அனுமன் ஜெயந்தி அன்று, காலை முதல், நள்ளிரவு 12:00 மணி வரை, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு, ஆரஞ்சு கயிறு மற்றும் செந்துாரம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.