பதிவு செய்த நாள்
20
டிச
2014
12:12
தேனி: தேனி மாவட்டத்தில் இருந்து பழநிக்கும், சபரிமலைக்கும் அதிகளவில் வாழைப்பழங்கள் அனுப்பி வைக்கப்படுவதால், விலை இரண்டு மடங்கு வரை அதிகரித்து, விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பழநி முருகன் கோயில் விழாவும், சபரிமலை ஐயப்பன் கோயில் விழாவும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த காலங்களில் பல லட்சம் பக்தர்கள் கோயில்களுக்கு வந்து செல்கின்றனர். தேனி மாவட்டத்தில் இருந்து பழநிக்கு பஞ்சாமிர்தம் தயாரிக்க பூவன், கற்பூரவள்ளி வாழைப்பழங்கள் அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, தேவதானப்பட்டி, உப்பார்பட்டி, சத்திரப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி உட்பட பல பகுதிகளில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு திசுவாழை அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. தவிர நேந்திரம் சிப்ஸ் தயாரிக்கவும் அனுப்பி வைக்கப்படுகிறது. சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், பெரியகுளம் குள்ளப்புரம் பகுதியில் இருந்து திசுவாழை சபரிமலைக்கு அனுப்பப்படுகிறது. இதர வகை பழங்களும் இரண்டு கோயில்ஸ்தலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் வாழைப்பழத்திற்கு கிராக்கி அதிகரித்து விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. வாழை விவசாயிகளிடம் திசுவாழை கிலோ 15 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். பதப்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பின்னர் கிலோ 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. செவ்வாழைப்பழம் வயல்களில் கிலோ ரூ.32 க்கு கொள்முதல் செய்து, வெளிமார்க்கெட்டில் ரூ.45 க்கும், நாழிபூவன் கிலோ ரூ.28 க்கு கொள்முதல் செய்து, வெளியில் ரூ.35 க்கும், கற்பூரவள்ளி ஒரு பழம் ரூ.2.40 க்கு கொள்முதல் செய்து ரூ.4 க்கும் விற்கப்படுகிறது. வாழை விவசாயி பூபதிராஜ் கூறுகையில், "பழனி, சபரிமலை சீசன் நேரங்களில் வாழைப்பழம் விலை அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இன்னும் இரண்டு மாதம் முழு சீசன் உள்ளதால், விலை கிலோவிற்கு 8 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கிறோம். நடப்பு ஆண்டு மழையும் கை கொடுத்ததால் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது,” என்றார்.