நாகர்கோவில் : ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயருக்கு16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது, இங்கு 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா புதன் அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை நான்கு மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து பால், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், எலுமிச்சை என 16 வகை அபிஷேகம் ஆஞ்சநேயருக்கு செய்யப்பட்டது. இதில் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்காக லட்சம் லட்டு தயாரிக்கப்பட்டிருந்தது. காலையிலிருந்து மாலை வரை இடைவிடாது அன்னதானம் வழங்கப்பட்டது.