பதிவு செய்த நாள்
22
டிச
2014
11:12
திருநெல்வேலி : கழுகுமலை முருகன் கோயிலில் நடந்த மலர்ச்சொரிதல் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று காவடி எடுத்தனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் ஒரு குடைவரைக் கோயிலாகும்.
இக்கோயிலுக்கு பின்புறம் மலையில்தான் பிரசித்திபெற்ற வெட்டுவான் கோயிலும், சமணர் புடைப்பு சிற்பங்களும் அமைந்துள்ளன. கழுகுமலை கோயிலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் பங்கேற்ற மலர்க்காவடி நடந்தது. அகஸ்தியரின் மாணவரான இடும்பன், வரம் வேண்டி, சிவகிரி மற்றும் சக்திகிரி ஆகிய மலைகளை தூக்கிச்சென்றதுதான் காவடியாக உருவானது. விருதுநகர் மாவட்ட முருக பக்தர்கள் பேரவை ஏற்பாட்டில் மலர்க்காவடி நடந்தது. மார்கழி அமாவாசை தினமான நேற்று காலையில் கோயிலின் வசந்தமண்டபத்தில் இருந்து துவங்கி, மலர்க்காவடியுடன் கிரிவலம் வந்து, சுவாமி கழுகுசாலைமூர்த்திக்கு மலர்அபிசேகம் செய்தனர். உலக நன்மைக்காகவும், உடல்நலன், கல்வி என தங்களின் வேண்டுகோளுக்காக பெரும்பான்மையாக சிறுவர், சிறுமியர்கள் இந்த காவடி எடுத்தனர். தொடர்ந்து கழுகாசலை மூர்த்திக்கு மலர்அபிசேகம் நடந்தது.