பதிவு செய்த நாள்
22
டிச
2014
12:12
புதுச்சேரி: அனுமன் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரி பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவில், சீனுவாசப்பெருமாள் தேவஸ்தானத்தில், அனுமந்த் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று மாலை 6:00 மணிளவில், ஆஞ்சநேயர் மற்றும் பெருமாள் சுவாமிக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இன்று (22ம் தேதி) மாலை 6:00 மணிளவில், ஆஞ்ஜநேயருக்கு வெண்ணைகாப்பு அலங்காரம் நடக்கிறது.
கொம்பாக்கம்: கொம்பாக்கம் வேங்கடாஜலபதி கோவிலில் உள்ள 21 அடி உயர விஸ்வரூப அபய ஆஞ்சநேயருக்கு, 1008 லிட்டர் பால் அபிஷேகமும், சந்தனம், எண்ணெய், தயிர் மற்றும் மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, ஆஞ்சநேயர் சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
திருபுவனை: திருபுவனை வரதராஜ பெருமாள் கோவிலில் அனுமந் ஜெயந்தியையொட்டி, காலை 8:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. 11:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த, ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மதகடிப்பட்டு, திருபுவனை, சன்னியாசிக்குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து மற்றும் திருத்தெளிச்சேரியில் உள்ள பார்வதீஸ்வர், கோதண்டராம சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.காரைக்கால் கோதண்டராமர் கோவிலில், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், பஞ்சமுகார்ச்சனை, தீபாராதனை மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், பார்வதீஸ்வரர் கோவில் தனி அதிகாரி ஆசைதம்பி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.