கோவை : கோவையில் ஆஞ்சநேயர் கோவில்களில், ’அனுமன் ஜெயந்தி’ விழாவையொட்டி, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி கோவில் வளாகத்திலுள்ள, அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு வெண்ணை தாழியில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது; வடைமாலை சாத்தப்பட்டிருந்தது.பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி ராஜஅலங்காரத்தில் அருள்பாலித்தார். குறிச்சிகல்யாணராமர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் வடைமாலை சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஈச்சனாரி மகாலட்சுமி மந்திர் ஆஞ்சநேயர், துடியலுார் குபேரஆஞ்சநேயர் கோவில், நவாவூர்பிரிவிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர், சாய்பாபா கோவிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.