சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், நேற்று ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து தங்கஅங்கி பவனி புறப்பட்டது.
சபரிமலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும் பூஜையின் இறுதி நாளில் நடப்பது மண்டல பூஜை. இந்நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி பவனியாக எடுத்து வரப்படும். ஆரன்முளா பார்த்த சாரதி கோயிலில் இருந்து மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக சபரிமலை மாதிரி ரதத்தில் எடுத்து வரப்படும். நேற்று அதிகாலை 5 மணி முதல் கோயில் முன்புறம் பக்தர்கள் தரிசனத்திற்காக அங்கி வைக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 6.30 க்கு அங்கி ரதத்தில் வைக்கப்பட்டு, 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டது. நேற்று இரவு ஓமல்லூர் பகவதி கோயிலில் தங்கியது. இன்று இரவு கோந்நி முருங்கமங்கலம் கோயிலிலும், நாளை இரவு பெருநாடு சாஸ்தா கோயிலிலும் தங்குகிறது. டிச., 26ம் தேதி காலை புறப்பட்டு மதியம் பம்பை கணபதி கோயில் அருகில் தரிசனத்துக்காக வைக்கப்படும் மாலை 3 மணிக்கு தலைச்சுமையாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும். டிச., 26 மாலை 6.30 மணிக்கு தங்கஅங்கி சாத்தி தீபாராதனை நடைபெறும். 27ல் மண்டல பூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு அங்கி அணிவிக்க படும். கேரள தேவசம் போர்டு அமைச்சர் சிவகுமார் தலைமையில் சன்னிதானத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.