வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே குவாரி செயல்பட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டதால் கிராமத்தினர் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். மல்லணம்பட்டி ஊராட்சி அழகாபுரியில் கல் குவாரி செயல்பட்டு வந்தது. கிராமத்தினர் குவாரியை தடை செய்ய வலியுறுத்தி 6 மாதங்களுக்கு முன்பு போராடத் துவங்கினர். கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தினர். நேற்று முன் தினம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ.,உத்தமன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
போராட்டம் தொடர்ந்து நடக்கும் என ஆர்.டி.ஓ.,விடம் தெரிவித்துவிட்டு வெளியேறினர். நேற்று டி.எஸ்.பி.,க்கள் கருப்பச்சாமி, ராமச்சந்திரன், ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அழகாபுரியில் குவிக்கப்பட்டனர். நேற்று குவாரிக்கு போராட சென்ற கிராம முக்கியஸ்தர்களை போலீசார் கைது செய்ததால் போராட்டத்திற்கு செல்லாமல் கோயிலில் தங்கினர். பகல் ஒரு மணியளவில் கிராமத்தினர் சார்பில் ஐகோர்ட் வக்கீல் மனோகர் போலீசாரிடம் பேசினார். அப்போது ஒதுக்கப்பட்டுள்ள அளவை விட கூடுதல் இடங்களில் குவாரி வெட்டுவதாக வக்கீல் தெரிவித்தார். புகாரை மனுவாக எழுதிக் கொடுக்குமாறு போலீசார் கேட்டனர். மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து தனி குழுவை நியமித்து அளக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். அதுவரை குவாரியில் பணி நடக்கக்கூடாது என கிராமத்தினர் வலியுறுத்தினர். போலீசார் கலெக்டரிடம் பேசி இதற்கு சம்மதம் தெரிவித்ததும் கிராமத்தினர் போராட்டத்தை கைவிட்டனர். தற்காலிகமாக போராட்டம் வெற்றி அடைந்ததால் மகாலட்சுமி கோயில் முன்பாக தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். அழகாபுரியைச் சேர்ந்த காமணன் கூறுகையில்,“காரியம் நிறைவேறுவதற்காக தெய்வத்திடம் வேண்டியிருந்தோம். தற்காலிகமாக வெற்றி கிடைத்ததால் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறோம். குவாரியை மூட நிரந்தர உத்தரவு விரைவில் கிடைக்கும்” என்றார்.