பதிவு செய்த நாள்
25
டிச
2014
12:12
காங்கேயம் : திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், பசும் பால் வைத்து பூஜை நடப்பதால், பால் தட்டுப்பாடு ஏற்படும் என, மக்கள் அச்சமடைந்துள்ளனர். காங்கேயம் அருகே சிவன்மலை மலை மீது, சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவில் சன்னிதானத்தில், ‘ஆண்டவர் உத்தரவு’ என்று எழுதப்பட்ட கண்ணாடி பேழை உள்ளது.இப்பேழையில், பொருள் வைத்து தினசரி பூஜை செய்யப்படும். அவ்வாறு பூஜை செய்யப்படும் பொருளால், சமுதாயத்தில் தாக்கம் ஏற்படும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. அதாவது, பக்தர் ஒருவர் கனவில், சிவன்மலை ஆண்டவர் வந்து, குறிப்பிட்ட பொருளை கொண்டு வந்து தருமாறு கேட்டுக் கொள்வார். பக்தர் கூறும் தகவலை, தேவஸ்தான ஊழியர்கள், ஸ்வாமி சன்னதியில், வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்தால் மட்டுமே, அந்த பொருள் கண்ணாடி பேழையில் வைத்து, பூஜை செய்யப்படும்.
அவ்வாறு பூஜை செய்யப்படும் பொருளால் ஆக்கம் அல்லது பெரும் அழிவு ஏற்படுவது வழக்கம். கடந்த, 100 ஆண்டுகளுக்கு மேலாக, இதுபோன்ற பூஜை தொடர்கிறது. தேசியக்கொடி, துப்பாக்கி, மணல், தண்ணீர், மண், தேங்காய், புத்தகம், மஞ்சள், மண், சர்க்கரை கலப்பை, ரூபாய் நோட்டு, என பல பொருள் வைத்து பூஜிக்கப்பட்டுள்ளது.சில பொருட்கள், சில ஆண்டு கூட வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, மண் வைத்து பூஜை செய்த போது, பூமியின் விலை பல மடங்கு உயர்ந்தது. ஆற்று மணல், மஞ்சள் போன்றவை வைத்து பூஜை செய்த போது, அதன் விலை உயர்ந்தது.தண்ணீர் வைத்து பூஜை செய்த போது, சுனாமி ஏற்பட்டது. கடந்த மார்ச், 5ம் தேதி முதல், சர்க்கரை வைத்து பூஜிக்கப் பட்டது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், கொங்கூர் கிராமத்தை சேர்ந்த சிவராம்,46, என்பவர் கனவில், பசும்பாலை கொண்டு வரும்படி, ஸ்வாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுபற்றி, சிவராம் கூறியதாவது: என் கனவில், கடந்த, 18ம் தேதி, முருகன் வந்து, ‘சிவன்மலை கோவிலில் பசும்பால் கொண்டு போய் வைத்து, பூஜை செய்’ என்றார். நான் சரியாக அதை பின்பற்றவில்லை. மீண்டும் ஒரு வாரத்தில், மீண்டும் கனவில் தோன்றி, ‘உடனடியாக பூஜையில் பால் வைத்து பூஜை செய்’ என்று கூறினார்.நான், சிவன்மலை கோவிலில் விவரத்தை கூறினேன். தற்போது ஆண்டவர் உத்தரவு பேழையில், பசும்பால் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இதுபற்றி, கோவில் சிவாச்சாரியார்கள் கூறுகையில்,‘தற்போது வைக்கப்பட்டுள்ள பாலால், பால் விலை ஏற்றம் உருவாகும். கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. பூஜையில் உள்ள பால், தினமும் மாற்றம் செய்யப்படுகிறது’, என்றனர்.