பதிவு செய்த நாள்
26
டிச
2014
11:12
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் 1.80 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக செய்யப்பட்ட நடராஜர் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம், மார்கழி மாத ஆருத்ரா தேரோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் நடராஜர் சுவாமி மற்றும் சி வகாமசுந்தரி அம்மன் தேர்கள் சென்னை பச்சையப்பா அறக்கட்டளை சார்பில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு பராமரித்து வரு கின்றனர். இந்த தேர்கள் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்ததால் இரு உற்சவத்தின் போது தேரோட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் பழுதடைந்த இரண்டு தேரையும் புதுப்பிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் கோரிக்கை ஏற்று அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் பச்சையப்பா அறக்கட்டளை சார்பில் கடந்த ஜூன் மாதம் 50 லட்சம் ரூபாய் செலவில் சிவகாமசுந்தரி அம்மன் தேர் புதுப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதியதாக நடராஜர் தேர் செய்ய பச்சையப்பா அறக்கட்டளை சார்பில் 1.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து புதியதாக செய்யப்பட்டது.
இந்த தேர் முழுவதும் பர்மா தேக்கு மரம் மூலம் 2,000 கன அடி மரச் சட்டங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. சுவாமி வைக்கப்படும் தேர் பீடம் வரை உயரம் 21 அடி, தேர் பீடம் எட்டு பட்டைகளாக அகலம் 5 அடி விட்டம் கொண்டதாகும். நான்கு இரும்பு சக்கரங்கள் 7 அடி உயரத்திலும், நடுவில் உள்ள இரு சக்கரம் இலுப்பை மரத்தாலும் உருவாக்கப்பட்டுள்ளது. தேர் பொம்மைகள் மட்டும் பழைய தேரில் இருந்ததை எடுத்து கெமிக்கல் மூலம் சுத்தம் செய்து புதுப்பிக்கப்பட்டு மீண்டும் புதிய தேரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தேரை தலைமை ஸ்தபதி தஞ்சாவூர் சிவநேசன், ஸ்தபதிகள் தி ருவாரூர் ஆதித்தன், கலைமணி ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 3 மாதங்களில் செய்து முடித்துள்ளனர். புதிய நடராஜர் தேர் செய்து முடிக்கப் பட்டு நேற்று வெள்ளோட்டம் நடந்தது. இதனையொட்டி தேரடியில் பொது தீட்சிதர்கள் சங்கச் செயலர் பாஸ்கர தீட்சிதர் தலைமையில் உற்சவ ஆச்சாரியர் நடராஜர் சுப்ரமணிய தீட்சிதர், கணபதி பூஜையுடன் துவங்கி சிறப்பு ஹோமம், பூஜை செய்யப்பட்டு காலை 8:30 மணிக்கு பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகிகள் பிரதாப்குமார், ராஜகோபால், தீட்சிதர்கள், சிதம்பரம் பக்தர்கள் சேர்ந்து வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
புதிய நடராஜர் தேர் வெள்ளோட்டம் நான்கு வீதிகளில் வந்ததைப் பார்த்து நகர மக்கள் பரவசம் அடைந்தனர். 10:30 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்து நின்றது. பல ஆண்டுகளாக சர்சையில் இருந்த நடராஜர் தேர் புதியதாக ஏற்படுத்தப்பட்டு நேற்று வெள்ளோட்டம் நடந்ததை கண்டு சிதம்பரம் நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், அறக்கட்டளை நிர்வாகிகள் தலைமை ஆசிரியர் சிங்காரவேலு, சரவணன், கோவில் தீட்சிதர்கள், இந்து ஆலய பாதுகாப்புக் குழுத் தலைவர் செங்குட்டுவன், செயலர் இன்ஜினியர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.