பதிவு செய்த நாள்
26
டிச
2014
11:12
ஆரியங்காவு: கேரளா ஆரியங்காவில் தர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. முன்னதாக மாப்பிள்ளை ஊர்வலத்தில் தர்மசாஸ்தா சர்வ ராஜ அலங்காரத்தில் பவனி வந்தார்.
ஆரியங்காவு தர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாண உற்சவம் டிச.,24ல் துவங்கியது. புஷ்கலா தேவி அம்பாள் சவுராஷ்டிரா குலதேவி என்பதால் திருவாங்கூர் மன்னர் மற்றும் தேவசம் போர்டால் சவுராஷ்டிரா மக்களை ’சம்பந்தி’ முறையில் திருக்கல்யாணத்தை நடத்தி கொடுக்கும்படி அழைப்பு விடுத்து கவுரவிப்பது வழக்கம்.
ஜோதி ரூபத்தில் அம்பாள்:ஆரியங்காவு அருகே மாம்பழத்துறையில் பகவதி புஷ்கலா தேவிக்கு நேற்று முன்தினம் சகல அபிஷேகங்களும் நடத்தப்பட்டது. மதியம் 2 மணிக்கு சம்பிரதாயப்படி சவுராஷ்டிரா மக்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர். கர்ப்பகிரகத்தில் இருந்து அம்பாள் ஜோதி ரூபத்தை, தந்தரி, சவுராஷ்டிராவினரிடம் வழங்கினார். அதை ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் சார்பில் டி.எஸ்.ஜெயபாலன் ஏந்தி வந்தார். மாலை 6.30 மணிக்கு கோயில் முன் நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் ஜோதி ரூபத்தை வரவேற்றனர். சன்னதியில் தந்திரி ஜோதி ரூபத்தை பூஜை செய்து கர்ப்பகிரகத்தில் கொண்டு சென்று அய்யனின் ஜோதியோடு ஐக்கியமாக்கினார். சரணகோஷம் முழங்க பக்தர்கள் ஜோதி ரூப ஐக்கியத்தை தரிசித்தனர். இதை சங்க நிர்வாகிகள் கே.ஆர்.ராகவன், எஸ்.ஜெ.ராஜன், எஸ்.எஸ்.மோகன், கே.ஆர்.ஹரிகரன், ஜெ.ஜெ.மோகன் முன்னின்று நடத்தினர்.
மாப்பிள்ளை அழைப்பு: திருக்கல்யாண நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பகல் 1 மணிக்கு சமபந்தி விருந்து, அன்னதானம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு ’தாலிப்பொலி ஊர்வலம்’ எனும் ’மாப்பிள்ளை அழைப்பு’ ஊர்வலம் சன்னிதானம் முன் துவங்கியது. சன்னிதானத்தில் நடந்த நிச்சயதார்த்தில் அம்பாள் சார்பில் சவுராஷ்டிராவினர் 21 தட்டுக்களில் நிச்சயதார்த்த சடங்குகளுக்கு உரிய பொருட்களுடன் ராஜகொட்டாரம் வந்தனர். அய்யன் சார்பில் திருவாங்கூர் தேவசம் போர்டார் மூன்று தட்டுக்கள்கர்ப்பகிரகத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு, ராஜகொட்டாரத்தில் ’பாண்டியன் முடிப்பு’ எனும் நிச்சயதார்த்த வைபவம் நடைபெற்றது. அம்பாள் சார்பில் சங்க உப தலைவர் கே.ஆர்.ராகவன், பகவான் சார்பில் நிர்வாக அதிகாரி ஜெ.ஜெயபிரகாஷ் ஆகியோர் நிச்சயதாம்பூலம் மாற்றிக் கொண்டனர். நிச்சயதார்த்த உரையாற்றி சடங்குகளை சங்க பொதுக் காரியதர்சி எஸ்.ஜெ.ராஜன் நடத்தி வைத்தார். அனைவருக்கும் சொர்ண புஷ்பம் மரியாதை வழங்கப்பட்டது. கர்ப்பகிரகத்தில் உற்சவருக்கு மலையாள தாந்திரீக முறைப்படியும், வெளிப்பிரகாரத்தில் பாண்டியநாட்டு முறைப்படியும் திருக்கல்யாணம் நடப்பது வேறெங்கும் இல்லாது இத்தலத்தின் தனிச்சிறப்பு.
திருக்கல்யாணம்: தர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாணம் இன்று (டிச.,26) இரவு 9 மணிக்கு மேல் துவங்குகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் அபிஷேகம். காலை 10 மணிக்கு ஊஞ்சல் உற்சவம். வஸ்திர சாஸ்துப்படி பொங்கல் படைப்பு, பகல் 1 மணிக்கு சம்பந்தி விருந்து. மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 5.30 மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சி என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.