பதிவு செய்த நாள்
26
டிச
2014
12:12
திருக்கனுார்: திருவக்கரை வக்ரகாளியம்மனுக்கு, 1008 பால் குட அபிஷேகம் நேற்று நடந்தது. திருக்கனுார் வக்ரகாளியம்மன் வழிபாடு மன்றம் சார்பில், 14ம் ஆண்டு 1008 பால்குட அபிஷேகம் நடந்தது. முன்னதாக, திருக்கனுார் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, காலை 9:00 மணிக்கு, 1008 பால்குடங்களுடன் பக்தர்கள் பாதயாத்திரையாக திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். பால்குட பாதயாத்திரையை, துணை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். கோவில் அறங்காவலர் குழுத் தலைவர்கள் துரைராஜன், கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, பால் குடங்களுடன், 3 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள திருவக்கரைக்கு எடுத்து சென்று காலை 11:30 மணிக்கு, வக்ரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, திருக்கனுார் வக்ரகாளியம்மன் வழிபாடு மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.