பதிவு செய்த நாள்
27
டிச
2014
10:12
ஆரியங்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவில் பக்தர்களின் சரண கோஷத்துடன் தர்மசாஸ்தா, புஷ்கலாதேவி திருக்கல்யாணம் நடந்தது.
ஆரியங்காவில் திருக்கல்யாண உற்சவம் டிச., 24ல் துவங்கியது. நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் சார்பில் கே.ஆர். ஹரிகரன், டி.எஸ்.ஆனந்தம், எஸ்.ஜெ.கண்ணன், எஸ்.ஆர்.ரவிச்சந்திரன், உப தலைவர் கே.ஆர்.ராகவன், பொதுக்காரியதரிசி எஸ்.ஜெ.ராஜன், உதவி காரியதரசி எஸ்.எஸ்.மோகன் ஆகியோர் முன்னின்று திருக்கல்யாண உற்சவம் நடத்தினர்.
திருக்கல்யாணம்: முன்னதாக காலை 10 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தை (நலுங்கு) முன்னிட்டு அம்பாள் தபசு காட்சியில் அருள்பாலித்தார். பிற்பகல் 1 மணிக்கு சம்பந்தி விருந்து, அன்னதானம் நடந்தது. மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலை 5:30 மணிக்கு கோயில் நாடக மேடையில் திருக்கல்யாண வரவேற்பு நடந்தது. இரவு 7:30 மணிக்கு சுவாமி, அம்பாள் அலங்காரச் சப்பரத்தில் புறப்பாடாகினர். கோயில் சன்னதியில் சுவாமி, அம்பாளுக்கு சவுராஷ்டிரா சமுதாயத்தினர் சோமஞ்ஜோடி (பூஜை பொருட்கள்) வழங்கினர். பின் சுவாமி, அம்பாள் சப்பரங்கள் கோயிலை வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தது.அங்கு அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்து குலவை சத்தத்துடன் திருக்கல்யாணம் நடந்தது.
தெய்வீக உரிமை: ஆரியங்காவு திருக்கல்யாண உற்சவத்தின் போது திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் சவுராஷ்டிரா சமுதாயத்தினருக்கு சம்பந்தி விருந்து மூன்று நாட்கள் வழங்கப்படுகிறது. திருவாங்கூர் மன்னரால், சவுராஷ்டிரா சமுதாயத்தினருக்கு இக்கோயிலில் சம்பந்தி என்ற தெய்வீக உரிமை வழங்கப்பட்டுள்ளது. உற்சவத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சவுராஷ்டிரா சமுதாயத்தினர் சார்பில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இன்று மண்டலாபிஷேகம்: கார்த்திகை 1ல் மாலை அணிந்து பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வர். இதன்படி ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் இன்று (டிச.,27) அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் துவங்கும். மதியம் 2 மணிக்கு ராஜ அலங்காரத்தில் தர்மசாஸ்தாவிற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மண்டல பூஜை நிறைவாகும்.