பதிவு செய்த நாள்
27
டிச
2014
11:12
பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் தர்மசாஸ்தா கோயிலில், தர்மசாஸ்தா (ஐயப்பன்), சவுராஷ்ட்ரா குலகன்னி புஷ்கலாதேவி திருக்கல்யாணம் நேற்று நடந்தது.
கேரளா ஆரியங்காவில் நடக்கும் ஐயப்பன் திருக்கல்யாணத்தையடுத்து, தமிழகத்தில் பரமக்குடியில் மட்டுமே ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் திருக் கல்யாண வைபவம் நடைபெறும். புஷ்கலாதேவி சவுராஷ்ட்ரா குலதேவி என்பதால், பரமக்குடியில் அதிகம் வாழும் இம்மக்களால் இத்திருவிழா கோலாகலமாக நடத்தப்படுகிறது.
இதையொட்டி,நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு தர்மசாஸ்தா - புஷ்கலா தேவி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று காலை 8:30 க்கு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், பெண் வீட்டார் அழைப்பு, மாலை மாற்றுதல் உள்ளிட்ட வைபவங்கள் நடந்தன. பகல் 10:15 க்கு ஊஞ்சல் சேவையில், தர்மசாஸ்தா, புஷ்கலா தேவிக்கு திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. நலுங்கு சுற்றுதல் உள்ளிட்ட சடங்குகளையடுத்து, தீபாராதனை, முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் 1:00 மணி முதல் அன்னதானம் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு பட்டுப்பல்லக்கில் புஷ்கலாதேவி சமேத தர்மசாஸ்தா வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் சேவா சங்க நிர்வாகிகள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (டிச.,27) மண்டலபூஜையையொட்டி, காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு ஐயப்பன் சர்வ அலங்காரத்துடன் திருவீதியுலா நடைபெறுகிறது.