பதிவு செய்த நாள்
29
டிச
2014
11:12
மோகனுார்:முனியப்பன் கோவிலில், 23 அடி உயரத்தில், 1,750 கிலோவில், ஐம்பொன்னில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட ராஜவேல், ஏராளமான பக்தர்கள் முன்னிலையில், நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த மணப்பள்ளியில், முனியப்பன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, 2013, நவம்பர், 21ம் தேதி, இரண்டு டன் எடையில், 26.5 அடி நீளத்தில், நாமக்கல்லில் தயார் செய்யப்பட்ட மகாராஜா வேல், ராட்சத கிரேனில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, ஐம்பொன்னில் ராஜவேல் செய்து பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டு, அப்பணி துவங்கியது. அதை தயாரிக்கும் பணியில், அதே பகுதியை சேர்ந்த இரும்பு பட்டறை உரிமையாளர்கள் ஈடுபட்டனர். தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, பித்தளை ஆகிய ஐம்பொன் கலந்து தயாரிக்கப்பட்ட ராஜவேல், 23 அடி உயரமும், 1,750 கிலோ எடையும் கொண்டது.அந்த வேலில் உள்ள, ஐந்து அடுக்கில், 750 மணிகள்பொருத்தப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு, 4.50 லட்சம் ரூபாய்.
ராஜவேல் தயார் செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று முனியப்பன் கோவில் முன் நடப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.