ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) 65/100
பதிவு செய்த நாள்
30
டிச 2014 12:12
அமைதியான நதியினிலே ஓடம் வெள்ளம் வந்தாலும் தாங்கும்
எடுத்த செயலைக் கச்சிதமாக முடிக்கும் ரிஷப ராசி அன்பர்களே!
நீங்கள் எதையும் அறிவுபூர்வமாக சிந்திப்பீர்கள். சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட நீங்கள் ஆடம்பரமாக வாழ ஆசைப்படுவீர்கள். இந்த ஆண்டு கேது சாதகமாக நின்று இறை அருளைத் தரும் நிலையில் உள்ளார். மனதில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும். செயல்களில் வெற்றியைத் தருவார். அதேபோல் உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன் 9-ம் இடத்தில் இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தந்து கொண்டு இருக்கும் தருணத்தில் இந்த ஆண்டு மலர்கிறது.சனிபகவான் 7-ம் இடமான விருச்சிகத்தில்இருக்கிறார். இது சிறப்பான நிலை அல்ல. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகளை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் வாசம் நிகழும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம் என்பது பொதுவான பலன். இதைக் கண்டு அஞ்ச வேண்டாம்.
சனிபகவான் சாதகமாக இல்லா விட்டாலும் ஜூன்12 முதல் செப். 5வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்ரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார். மாறாக, இந்தக் காலத்தில் அவர் எண்ணற்ற பல நன்மைகளைச் செய்வார். குறிப்பாக முயற்சிகளில் வெற்றியைத் தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். மனக்குழப்பம் தீர்ந்து தெளிவுடன் செயல்படுவீர்கள். இழுபறியாக நடந்த செயல்களில் கூட முன்னேற்றம் உண்டாகும். குருபகவான் 3-ம் இடமான கடகத்தில் உள்ளார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள்தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அவரது 5-ம் இடத்தின் பார்வை மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை நடத்தி வைப்பார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் வழியில் நன்மையான செய்தி வந்து சேரும். அவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு மனமகிழ்ச்சி கொள்வீர்கள். 7-ம் இடத்துப்பார்வை மூலம் மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும்.
உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களைப் புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குரு ஜூலை 6ல் வக்கிர நிவர்த்தி அடைந்து, கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு செல்கிறார். அப்போது மன உளச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார். தற்போது ராகு 5-ம் இடமான கன்னியில் உள்ளார். அங்கு அவரால் நன்மை தர இயலாது. அவரால் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் உருவாகலாம். அதேநேரம் கேது 11-ம் இடமான மீனத்தில் இருந்து பல்வேறு நன்மைகளைத் தந்துகொண்டிருக்கிறார். அவரால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், காரியத்தில் அனுகூலமும் கிடைக்கும். முயற்சியில் இருந்த தடை நீங்கும். அமைதியான நதியில் ஓடும் ஓடம், வெள்ளம் வரும் காலத்தில் கூட தள்ளாடினாலும் தாங்கும் என்ற தன்னம்பிக்கையான நிலை இருக்கிறது.மேற்கண்ட கிரகங்களின் நிலையில் இருந்து இந்த ஆண்டுக்குரிய ஒட்டுமொத்த பலனைக் காணலாம். ஆண்டின் தொடக்கத்தில் ஏற்படும் சிற்சில சிரமங்களை பொறுத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருளாதார வளம் இருந்தாலும், செலவுகளும் அதிகமாக இருக்கும். சிக்கனமாக இருப்பது நன்மை தரும். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். யாருடனும் வீண் விவாதங்களில் ஈடுபடுவது கூடாது. ஆனால், ஜூன் மாதத்திற்குப் பிறகு நிலைமை உங்களுக்கு சாதகமாக மாறி விடும். பொருளாதார வளம் மேம்படும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த செயலில் வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.
குடும்பம்வீட்டில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் உருவாகும். ஆனாலும் கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு தொடரலாம். விட்டுக் கொடுத்து போவதும், பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதும் நல்லது. ஜூன் மாதத்திற்கு பிறகு படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். சிலர் வசதியான வீட்டிற்கு குடிபுகுவதற்கு யோகமுண்டாகும். குடியிருக்கும் வீட்டிலேயே தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புண்டு.
தொழில், வியாபாரம்குருவின் பார்வை பலத்தால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். ஆனால், மறைமுகப்போட்டி போன்ற பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிஇருக்கும். அதிக சிரத்தை எடுத்து உழைக்கும் நிர்பந்தம் உருவாகும். சில சமயங்களில் பண விரயமும் ஏற்படலாம். யாரையும் நம்பி பணம், முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். இவையெல்லாம் ஜூன் மாதம் வரை தான். இதன்பின் சனி பகவான் வக்கிரம் அடைவதால் வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. தடைகள் அகலும். ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில் தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்று ஆதாயத்துடன் திரும்புவீர்கள். ஆனால் அலைச்சலும் அதிகரிக்கும். பணியாளர்கள் வேலைப் பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு பொறுப்பு தட்டி பறிக்கப்படலாம் என்பதால், மேல் அதிகாரிகளிடம் சற்று அனுசரித்து போகவும். யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். சிலருக்கு வேலையில் வெறுப்பு வரும். ஆனால், குருவின் பார்வை பக்க பலமாக இருப்பதால் எந்த கடுமையான விளைவும் ஏற்பட்டு விடாது. ஜூனுக்குப் பிறகு சம்பள உயர்வு வரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம். விண்ணப்பித்த கடனுதவி வந்து சேரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை ஆர்வமுடன் கற்க முயல்வீர்கள்.
கலைஞர்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையே என்று கவலைபட வேண்டாம். சில காலம் சிரத்தை எடுத்து ஒப்பந்தங்களை பெறுங்கள். ஜூனுக்குப் பிறகு புதிய ஒப்பந்தம் தாராளமாக வரும். ரசிகர்கள் மத்தியில் நற்பெயர் காப்பாற்றப்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த பரிசு,பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் ஆண்டின் ஆரம்பம் சுமார் என்றாலும், ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில் புகழ், பாராட்டு கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். மக்கள் நலப்பணிகளில் அக்கறை காட்டி வருவீர்கள். தலைமையின் சொல்லுக்கு கட்டுப்படுவது நன்மையளிக்கும். தொண்டர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு ஊக்கம் அளிக்கும்.
மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சற்று முயற்சி எடுத்து படிக்கவும். ஆனாலும், உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. அடுத்த கல்வி ஆண்டில் முன்னேற்றமான பலனைக் காணலாம். விரும்பிய பாடம் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் சிலர் பெறலாம்.ஆசிரியர் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது எதிர்கால வளர்ச்சிக்குத் துணைநிற்கும்.
விவசாயிகள்அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். கால்நடை வளர்ப்பவர்களும் நல்ல பலனை காணலாம். மே மாதத்திற்கு பிறகு முன்னேற்றமான பலனை காணலாம். முயற்சி எடுத்தால் புதிய சொத்துக்களை வாங்கலாம். மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல், கோதுமை நல்ல மகசூலை கொடுக்கும். திட்டமிட்டபடி நவீன உழவுக்கருவிகளை வாங்குவீர்கள். நிலம் சம்பந்தமான பிரச்னைக்கு சமரசப் பேச்சு மூலம் தீர்வு காண்பீர்கள்.
பெண்கள் குடும்ப விஷயங்களில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அண்டை வீட்டாரிடம் வளவள பேச்சு வேண்டாம். ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில் குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரப் பாடல்: அண்ணல் ரகுராமன் அருள்பதம் கொண்டவனே!விண்ணவர் போற்றும் வீர பராக்கிரமனே! தண்ணிலும் இனிய தன்மை கொண்டவனே!உன்னிரு பதம் பணிந்தேன் அனுமனே!அஞ்சனை சுதனே! அசுரன் தசமுகன்அஞ்சிட எதிரில் அமர்ந்தவனே!வஞ்சனை சூது இல்லாத நெஞ்சினில்வந்து அமர்ந்திடும் ஆஞ்சநேயா சரணம்!
பரிகாரம்: பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். பிள்ளையாரையும், ஆஞ்சநேயரையும் தினமும் வழிபடுங்கள். பிரதோஷ காலத்தில் சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுத்து பசியாற்றுங்கள். நவக்கிரக வழிபாட்டை சனியன்று மேற்கொள்ளுங்கள். ஏழைகளுக்கு, ஆதரவற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். குலதெய்வ வழிபாட்டால் பிரச்னை மறையும்.
|