சபரிமலை: சபரிமலை மகரவிளக்கு பூஜையின் முன்னோடியாக எருமேலி பேட்டைதுள்ளல் ஜன.,11ல் நடக்கிறது. மறுநாள், பந்தளத்தில் இருந்து ஐயப்பனின் திருவாபரணம் புறப்படுகிறது.
சபரிமலையில் ஜன.,14ல் ’மகர விளக்கு பெருவிழா’ நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். ’மகர ஜோதி’ தரிசனத்தில் எல்லா பக்தர்களும் சன்னிதானத்தில் குவியாமல், ’ஜோதி’ தெரியும் பிற இடங்களுக்கும் அனுப்பி வைக்க ஆலோசிக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் ’பேட்டை துள்ளல்’ நிகழ்ச்சி ஜன.,11ல் நடக்கிறது. பிற்பகல் 12 மணிக்கு அம்பலப்புழா பக்தர்களும்; மாலை 3 மணிக்கு ஆலங்காடு பக்தர்களும் பேட்டை துள்ளுகின்றனர். ஜன., 12ல் பந்தளத்தில் இருந்து ஐயப்பனின் திருவாபரணம் புறப்படுகிறது. பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உச்சபூஜைக்கு பின் பவனி புறப்படும்.
ஐதீகம்: ஐயப்பனை எடுத்து வளர்த்தவர் பந்தளம் மன்னர். ஐயப்பன் சபரிமலை சென்ற பின், ஆபரணங்களுடன் மகனை காண தந்தை செல்வது இதன் ஐதீகம். திருவாபரணம் கொண்டு வரும் காட்டுப்பாதையை சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
பக்தர்கள் கூட்டம்: சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மரக்கூட்டம், சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் ஆகிய இடங்களில் பக்தர்களை கட்டுப்படுத்த போலீசார் சிரமப்படுகின்றனர். ஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் சன்னிதானத்தில் தங்குவர் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.