சபரிமலை: சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர நட்சத்திரத்தை கண்டு பரவசத்துடன் சாமி கும்பிட்ட பக்தர்கள் மலை இறங்கினர். சபரிமலையில் மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 3.15 மணிக்கு தெடங்கிய நெய்யபிஷேகம் பகல் 12.30 மணி வரை நீடித்தது. தொடர்ந்து கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு உச்சபூஜை முடிந்து 1.40-க்கு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் திருவாபரணத்தை வரவேற்க செல்லும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஸ்ரீகோயில் முன்புறம் வந்தனர். அவர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார். பந்தளத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி புறப்பட்ட திருவாபரணபவனி மாலை 5.30 மணி வாக்கில் சரங்குத்தி வந்தடைந்தது. தேவசம்போர்டு அதிகாரிகள் சென்று முறைப்படியாக வரவேற்பு கொடுத்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பவனி 6.50 மணிக்கு சன்னிதானம் வந்தது. பக்தர்கள் சரணகோஷம் முழங்க 18-ம் படி வழியாக ஒரு திருவாபரண பெட்டி வந்தது.
இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீகோயில் முன் திருவாபரணபெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்று நடை அடைத்தனர். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருந்தது. தீபாராதனை முடிந்த சில நிமிடங்களில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். பின்னர் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது. ஜோதியும், நட்சத்திரமும் கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலைஇறங்கினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புல்மேட்டில் மகர ஜோதி தரிசனத்துக்கு பின்னர் நடைபெற்ற விபத்தில் 102 பேர் இறந்ததால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.
விபத்துக்கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.மொத்தம் 600 டாக்டர்கள் 30 ஆம்புலன்சுகளுடன் தயார் நிலையில் இருந்தனர். நடப்பு மண்டல- மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.
மகரசங்கரமபூஜை: மகரவிளக்கு நாளில் சபரிமலையில் நடைபெறும் முக்கிய பூஜை மகரசங்கரமபூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில் இந்த பூஜை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் இந்த பூஜை இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இதற்காக தீபாராதனை முடிந்து அரை மணி நேரத்தில் ஆபரணங்கள் மாற்றப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்து அனுப்பப்பட்ட நெய்தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பனின் விக்ரகத்தில் நேரடியாக அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் ஐயப்பன் விக்ரகத்தில் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.