பதிவு செய்த நாள்
23
ஜன
2015
10:01
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில், 25ம் தேதி, தைப்பூச திருவிழா துவங்குகிறது. திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், தைப்பூசத் திருவிழா, வரும், 25ம் தேதி துவங்கி, ஃபிப்ரவரி, 4ம் தேதி வரை, 11 நாட்கள் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், மஹா தீபாராதனை நடக்கிறது. விழா நாட்களில், தினமும் இரவு, 8 மணிக்கு அம்மன் வெவ்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஃபிப்ரவரி, 2ம் தேதி இரவு, 8 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளல், 3ம் தேதி காலை, 8 மணிக்கு, கண்ணாடி பல்லக்கில் வலம் வந்து தீர்த்தவாரியும் நடக்கிறது. இரவு, 10 மணிக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர் பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலை, 1 மணிக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருவதாக, கோவில் இணை ஆணையர் தென்னரசு தெரிவித்துள்ளார்.