பதிவு செய்த நாள்
24
ஜன
2015
10:01
ஊட்டி: ஊட்டியில் நடந்த பழங்குடியின கலாசார விழாவை சுற்றுலா பயணிகள் கண்டு வியந்தனர். பிரசார் பாரதி மற்றும் தஞ்சை தென் மண்டல கலாசார மையம் சார்பில், ஊட்டி பகல்கோடுமந்து பகுதியில், புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று நடந்தது. கோவை பொதிகை தொலைக்காட்சி நிலைய தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் சங்கர் முன்னிலை வகித்தார். நீலகிரியில் வசிக்கும் தோடர், கோத்தர், இருளர், ஆலு குரும்பர், முள்ளு குரும்பர், பெட்ட குரும்பர், பணியர், காட்டுநாயக்கர் போன்ற பழங்குடியின மக்கள், தங்களின் பாரம்பரிய கலைகளை அரங்கேற்றினர். ஒடிசாவில் உள்ள முண்டா பழங்குடியின மக்கள், சம்பூர் நடனத்தை ஆடி, அசத்தினர். தவிர, குஜராத்தி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்கள், தங்களின் பாரம்பரிய உடையணிந்து, இசைக் கருவிகளுடன், நடனமாடினர். தவிர, நீலகிரியில் வாழும் திபெத்தியர், தங்கள் நாட்டின் பாடலை பாடினர். கோவை சக்தி நிமிர்வு கலையக குழுவினர், பறையடித்து, உற்சாக நடனமாடினர். இந்திய மானுடவியல் ஆய்வு கழக துணை இயக்குனர் சத்யநாராயணன், ஊட்டி அகில இந்திய வானெலி நிலைய தலைவர் மாதவி, கூடலுார் உதவி வன பாதுகாவலர் சமந்தா உட்பட பலர் பங்கேற்றனர். ஷூட்டிங் மட்டம் பள்ளத்தாக்கு காட்சிமுனையில் நடந்த இந்த கலை நிகழ்ச்சிகளை, சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இன்றும், இந் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.