பதிவு செய்த நாள்
27
ஜன
2015
11:01
திருவொற்றியூர்: திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருவொற்றியூர் கடற்கரையில் பட்டினத்தார் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோவிலில், ஒரு கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பிரமாண்ட தியான மண்டபம், மகா மண்டபம், பழமை மாறாமல் கல்காரமாக மூலவர் சன்னிதி ஆகியவை கட்டப்பட்டன. கும்பாபிஷேக நிகழ்ச்சி, கடந்த, 23ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. 24ம் தேதி காலை முதல், யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று காலை 6:30 மணிக்கு மகாபூர்ணாஹூதி முடிந்து, காலை, 6:50 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகமும், காலை 7:00 மணிக்கு பட்டினத்தார் மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றன.
சீரடி சாய்பாபா பிரதிஷ்டை: திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர் சிவா – விஷ்ணு கோவிலில், 46வது சன்னிதியாக சீரடி சாய்பாபா பிரதிஷ்டை நேற்று நடந்தது. நேற்று அதிகாலை, இரண்டாம் கால யாக பூஜை, அஸ்திர ஹோமம், மகாபூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து, கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது.
குரோம்பேட்டையில்...: குரோம்பேட்டை, நியூகாலனி ௧௪வது குறுக்கு தெருவில் உள்ள ராம ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.