நமது சுமையை பழநி முருகனிடம் ஒப்படைக்கும் வைக்கும் நன்னாளான தைப்பூசத்தை விரைவில் கொண்டாட உள்ளோம். இந்த நன்னாளை ஒட்டி காவடிகளைப் பக்தர்கள் சுமந்து செல்வார்கள். ஒரு குழந்தை பிறந்ததும் தாயிடம் பால் குடிக்கிறது. மூன்று வயதைக் கடந்ததும் பசும்பால் குடிக்கிறது. இறப்பதற்கு முன்னும் பால் ஊற்றுகிறோம். மறைந்த பிறகு சிதையிலும் பால் ஊற்றப்படுகிறது. "முருகா! என் பிறப்பு முதல் இறப்பு வரை சுமை தான். அந்தச்சுமையை தாங்குபவனாக என்னுடன் வா,” என்றழைப்பதே பால்காவடி தத்துவம். "உலகத்துன்பங்களால் சூடேறிக் கிடக்கும் என் மனதின் சூட்டை தணித்து வை” என முருகனை வேண்டுவது பன்னீர் மற்றும் சந்தனக்காவடி தத்துவம். "என் வாழ்க்கைப் பாதையில் மனைவி, குழந்தைகள், உற்றார், உறவினர் என எத்தனையோ பேர் உதிரிப்பூக்களாய் வந்திருக்கின்றனர். என்னுடன் அவர்களையும் கரை சேர்” என்று வேண்டுவது புஷ்பக்காவடி தத்துவம். "மீன் போல் பிறவிக்கடலில் கிடந்து தத்தளிக்கிறேன். கருடனைக் கண்டு மிரளும் பாம்பைப் போல் வாழ்க்கை என்னும் புற்றுக்குள் கிடந்து தவிக்கிறேன். இந்த பிறவியில் இருந்து என்னை மீட்டு உன்னோடு சேர்த்துக்கொள்” என்பது மச்சம், சர்ப்பக்காவடி தத்துவம். "விடியலுக்காக காத்திருக்கும் சேவல் போல், பிறவியாகிய இருளில் இருந்து எனக்கும் எப்போது விடிவுகாலம் வரும்?” என்று கேட்டு சேவல்காவடி எடுக்கிறோம். இந்தக் காவடிகளை இன்று முதல் பழநிக்கு நாம் சுமக்கவிருக்கிறோம். இன்று கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. காவடியுடன் புறப்படுவோமா!