தேவகோட்டை : தேவகோட்டையிலிருந்து பல ஆண்டுகளாக பாதயாத்திரையாக பக்தர்கள் தைப்பூசத்திற்கு பழநி சென்று முருகனை வழிபடுகின்றனர். இவ்வாண்டு பாதயாத்திரை நேற்று துவங்கியது. ராமநாதபுரம், முதுகுளத்தூர்,திருவாடானை, ஆர்.எஸ். மங்களம் உட்பட சுற்றுப்புற பகுதிகளிலிருந்து பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு தேவகோட்டை வந்தனர். பக்தர்கள் சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலிருந்து புறப்பட்டு சென்றனர்.பாரம்பரிய முறைப்படி முதலியார் காவடி ஒன்றும், 29 நகரத்தார் காவடிகளும் புறப்பட்டு சென்றனர். முன்னதாக நகர்வலம் வந்தனர். விநாயகர் கோயிலில் பூஜைகள் செய்த பின் காவடிகள் பாதயாத்திரை பயணத்தை தொடங்கினர். காரைக்குடி: பழநி தைப்பூசத்தை முன்னிட்டு சாக்கோட்டை அருகே ஜெயங்கொண்டானிலிருந்து ரத்தினவேல் நாட்டார்கள், அகில பாரத முருகா சேவா சங்கம் சார்பில் 201 பேர் நேற்று முன்தினம் மாலை காவடி பயணம் மேற்கொண்டனர். அன்று இரவு சாக்கோட்டை உய்வந்தம்மன்கோயிலில் தங்கி, நேற்று மதியம் குன்றக்குடி வந்தடைந்தனர். மாலை அங்கிருந்து கிளம்பி, நேற்று இரவு திருப்பத்தூர் வந்தடைந்தனர். இவர்கள் வரும் பிப்.1ம் தேதி பழநிக்கு சென்று, பிப்.2-ம் தேதி மலையேறுகின்றனர்.