பதிவு செய்த நாள்
29
ஜன
2015
11:01
காங்கேயம்: காங்கேயம் அடுத்த சிவன்மலை முருகன் கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழா, கடந்த, 25ம் தேதி, வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை ஆறு மணிக்கு, வீரகாளியம்மன் மலைக் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பின், கட்டளைதாரர் இருபத்து நான்கு வேட்டுவநாவிதர் சார்பில், மயில் வாகன அபிஷேகமும், 11 மணிக்கு விநாயகர் வழிபாடும் நடந்தது. பின், சுப்பிரமணிய சுவாமிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, திருநீலகண்டர் மண்டபத்தில், குலாலர் சமூக மண்டப கட்டளை நிகழ்ச்சி நடந்தது. இரண்டு மணிக்கு சுவாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும், இரவு ஏழு மணியளவில் அருளாடி இனமக்கள் சாம்பவலசு, செல்லப்பம்பாளையம் கட்டளைதாரர் பூஜையும் நடந்தது.
தொடர்ந்து, தினமும், காலை, 9 மணிக்கு காலசாந்தியும், கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்கள் சார்பில் மண்டபக்கட்டளையும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்வடம் பிடித்தில், ஃபிப்., 3ம் தேதி துவங்குகிறது. அன்று காலை, 4 மணிக்கு மகா அபிஷேகமும், 6 மணிக்கு சுவாமி ரதத்துக்கு எழுந்தருளல், மாலை, 4 மணிக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலையில், தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 4ம் தேதி, திருத்தேர், மலையை வலம் வந்து, மூன்றாம் நாளான, 5ம் தேதி நிலையை அடையும். இம்மூன்று நாட்களும் அன்னதானம், பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏராளமான பக்தர்கள், பல்வேறு இடங்களில் இருந்து, காவடி எடுத்து வந்து, நேர்த்தி கடன் செலுத்துவர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பசவராஜன், உதவி ஆணையர் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் செய்கின்றனர்.