புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே பாலமுருகன் கோவிலில் தை கிருத்திகையையொட்டி ஊஞ்சல் உற்சவம் மற்றும் திருத்தேர் உலா நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் மாதம் தோறும் கிருத்திகையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். தை மாதம் கார்த்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் மற்றும் திருத்தேர் வீதியுலா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் கோவிலைச் சுற்றி வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பாலமுருகன், விநாயகர், அம்மன் சுவாமிகள் ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தனர். இதில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.