ஒருமுறை பிரம்மன், முருகனை பாலகன் என்று நினைத்து செருக்குடன் வணங்க மறுத்தார். அவரை அழைத்த முருகன், நீர் தானே படைப்பவர். படைப்புக்கு ஆதாரம் ஓம் என்னும் பிரணவ மந்திரம். அதற்குரிய விளக்கத்தைச் சொல்லும்,” என்றார். பிரம்மாவுக்கு விளக்கம் தெரியவில்லை. அவரைச் சிறையிலடைத்தார் முருகன். படைக்கும் தொழிலை தானே ஏற்று நடத்த ஆரம்பித்தார். பிரம்மனை விடுவித்து அருளும்படி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். “என்னையும் முருகனையும் பிரித்து உணர்கின்றவர்கள் இன்பமடைய மாட்டார்கள் என்பதை உணர்த்தவே, முருகன் பிரம்மனைச் சிறையிலடைத்தான். தன்னை வணங்கவில்லை என்பதற்காக அல்ல,” என்றார் சிவன்.பிறகு பிரம்மனை விடுவித்த சிவபெருமான், ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருள் அறிந்தவராக இருந்தாலும், தன் மழலை மகனிடம் இருந்து தெரிந்து கொள்வதற்காக, அவரிடமே உபதேசம் பெற்றார். சுவாமியாகிய சிவனுக்கே மந்திர உபதேசம் செய்ததால் சுவாமிநாதன் என்று பெயர் பெற்றார் முருகன். இப்படிப்பட்ட பெருமையுடைய முருகப்பெருமானுக்கு, சிவனுக்குரிய தைப்பூசத்தை நடத்துவது மிகவும் பொருத்தம். இன்று பழநியில் காலை 9மணிக்கு முத்துக்குமார சுவாமி தந்தப் பல்லக்கிலும், இரவு 7.30 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர்.