பதிவு செய்த நாள்
31
ஜன
2015
10:01
திருப்பதி: திருமலையில், பக்தர்களுக்கு கூடுதலாக இரண்டு லட்டு வழங்குவது குறித்து, தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.திருமலையில் ஏழுமலையானை தரிசித்த பின் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் சார்பில், குறைந்த விலையில் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.மேலும், சேவா டிக்கெட், 300 ரூபாய் விரைவு தரிசனம், 50 ரூபாய் சுதர்சன டிக்கெட் பக்தர்களுக்கு, தலா, இரண்டு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.கோவிலுக்கு வெளியில் உள்ள லட்டு கவுன்டரில், ஒருவருக்கு, 100 ரூபாய்க்கு, நான்கு லட்டு வழங்கப்படுகிறது. இதனுடன், லட்டு பெறுவதற்கான பிளாஸ்டிக் கவர், ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், லட்டு கவர்களை தேவஸ்தானம் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு, 5.50 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.மேலும், பக்தர்களுக்கு கூடுதலாக இரண்டு லட்டு வழங்க, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
உண்டியல் வருமானம்: திருப்பதி:திருமலை ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.16 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர்.