திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது. கோயிலில் ஜன. 21ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார். தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜி.எஸ்.டி., ரோட்டில் தெப்பக்குள தண்ணீரில் மிதவை தெப்பம் அமைக்கப்பட்டு, காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மூன்று சுற்றுக்கள் சுற்றி வந்தது.
ஊஞ்சலாட்டம்: இரவு 7 மணிக்கு தெப்பக்குள மைய மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி பக்தி உலாத்துதல் முடிந்து மீண்டும் மிதவை தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பம் மூன்றுமுறை வலம் வந்து தெப்பத் திருவிழா நடந்தது. கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை, கண்காணிப்பாளர் பால லட்சுமி, பணியாளர்கள் பங்கேற்றனர்.
சூரசம்ஹாரம்: தெப்பத்திருவிழா முடிந்து பக்தர்கள் திருக்கண் மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி, சன்னதி தெருவில் சொக்கநாதர் கோயில் முன்பு சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி சூரசம்ஹாரம் லீலை நிகழ்ச்சி நடந்தது.