திருப்புவனம்: திருப்புவனம் மடப்புரம் பத்ர காளியம்மன் கோயில் முன் போக்குவரத்து வசதிக்காக சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்காக பள்ளம் தோண்டும் போது 4 அடி உயரமும் 1 அடி அகலம் கொண்ட இரு கல்வெட்டு தூண்கள் கிடைத்தன. மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய தலைவர் ராஜேந்திரன் கூறும் போது, மடப்புரத்தில் ஏற்கனவே தற்பலி (நரபலி) கொடுக்கும் வீர சிற்பங்கள், கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இந்த கல்வெட்டு கி.பி 1010ம் ஆண்டைச் சேர்ந்தது. ஒரு கல்வெட்டில் ராசராசனின் மெய்கீர்த்தியும் 25ம் ஆட்சி ஆண்டைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் மேற்றளி எனப்படும் பெருமாள் கோயிலுக்கு எட்டு மா நிலமும், ஆறு காசுகளும் வழங்கப்பட்டு கோயிலுக்கு நந்தவனம், நொந்தா(தினசரி விளக்கு ஏற்றுவது) விளக்கு அமைப்பது பற்றியும் எழுதப்பட்டுள்ளது. மேலும் பிராமணர் சபை அமைக்கப்பட்டு அதற்கு ஓடானூர் (தற்போதைய ஓடாத்தூர்) நாராயணன், கிராவித்தகன், வாசுதேவன் ஆகியோர் இருந்தது பற்றியும், திருச்சுழி, தென்கரை ஆகிய ஊர்கள் இந்த ஆட்சியின் கீழ் இருந்தது பற்றியும் எழுதப்பட்டுள்ளது, என்றார்.