பதிவு செய்த நாள்
23
பிப்
2015
10:02
திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடை அம்மன் உடனாய ஒற்றீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று, கோலாகலமாக நடைபெற்றது. திருவொற்றியூரில் இந்து சமய அறநிலைய துறை நிர்வாகத்தில், வடிவுடையம்மன் உடனாய ஒற்றீஸ்வரர் கோவில் உள்ளது.
இது, தியாகராஜ சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மிகவும் பழமையானதும், தேவார மூவரால் பாடல் பெற்றதுமான இந்த கோவிலில், 3 கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணி முடிந்த நிலையில், கடந்த 15ம் தேதி விநாயகர் பூஜையுடன், கும்பாபிஷேக நிகழ்ச்சி துவங்கியது. தனபூஜை, சாந்தி பூஜை, மூர்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், கோபூஜை, கன்யா பூஜை, வாஸ்து தோஷம் நீக்கும் பூஜை மற்றும் திசா ஹோமங்கள் நடைபெற்றன. மகாசிவராத்திரியை ஒட்டி 108 சங்காபிஷேகம், ஒற்றீஸ்வரருக்கு நான்குகால சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. கடந்த, 20ம் தேதி அஷ்டபந்தனம், முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. யாகசாலையில், 60 குண்டங்கள், 36 வேதிகைகள் அமைக்கப்பட்டன. நேற்று முன்தினம், 305 விக்கிரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. வடிவுடையம்மன் பீடத்தில், புதிதாக சுவர்ண பந்தனம் சாத்தப்பட்டது. நான்காம் கால யாகசாஜை பூஜை, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு துவங்கியது. சோமகும்ப பூஜை முடிந்து, 420 புனிதநீர் திருக்குடங்கள் யாகசாலைகளிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, அனைத்து சன்னிதிகளின் விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு, காலை 7:33 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தங்க திருவடிகள்: அப்போது, 200 பேர் சங்கு வாத்தியத்தை முழங்கினர். சென்னை மற்றும் புறநகர் பகுதியிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வடிவுடையம் மமனுக்கு தங்கத்தாலான இரண்டு திருவடிகள், பக்தர் ஒருவரால், சமர்ப்பிக்கப்பட்டது. கோவிலின் மூத்த அர்ச்சகர் ஒருவர் கூறுகையில்,”இந்த கோவிலில், 1998ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தில் ஒற்றீஸ்வரர் சன்னிதி இடம்பெறவில்லை. 1936ம் ஆண்டுக்கு பின் தற்போதுதான் ஒற்றீஸ்வரர் சன்னிதிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது,” என்றார்.