பதிவு செய்த நாள்
27
பிப்
2015
11:02
மணப்பாறை: மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரில் நடந்த வேடபரி நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன், பொன்னர், சங்கர், தங்காள், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ணசாமி ஆகிய கோவில்களில் மாசி பெருந்திருவிழா கடந்த, 19ம் தேதி இரவு, காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேடபரி, நேற்று நடந்தது.வீரப்பூர் பெரியக்காண்டியம்மன் கோவில் இருந்து, ரோஹினி நட்சத்திரத்தில் பொன்னர் குதிரை வாகனத்தில் கையில் அம்புடனும், வெள்ளை யானை மீது பெரியகாண்டியம்மன் அமர்ந்து செல்ல, பின்னால், தங்காள் குடத்துடன் தீர்த்தம் எடுத்து சென்று, அனியாப்பூர் குதிரைக்கோவிலில் அம்பு போடும் வேடபரி நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்கள் மகேஷ் என்ற ராமகிருஷ்ணன், பொன்னழகேசன், சௌந்திரபாண்டியன், ஊர் பட்டையதாரர்கள் பெரியபூசாரி வீரமலை, வையம்பட்டி யூனியன் சேர்மன் கல்பனா, துணை சேர்மன் அனியாப்பூர் முத்துச்சாமி, மணப்பாறை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், வையம்பட்டி ஒன்றிய செயலாளர் சேது, அனியாப்பூர் பஞ்சாயத்து தலைவர் சாவித்திரி, துணைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் மலர்விழி, கருங்குளம் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.வேடபரி திருவிழாவையொட்டி கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், கோயம்புத்தூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும், லாரி, தனியார் பஸ்கள், வேன்கள், டிராக்டர், மாட்டுவண்டிகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.பக்தர்கள் பாதுகாப்புக்காக, திருச்சி டி.ஐ.ஜி, செந்தாமரைக்கண்ணன். மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்வரி ஆகியோர் தலைமையில் மணப்பாறை டி.எஸ்.பி., ராஜராஜன் மேற்பார்வையில், 1,000க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.இன்று (வெள்ளிக்கிழமை) காலை பெரியக்காண்டியம்மன் தேர் பவனி நடைபெறுகிறது. 28ம் தேதி மாலை, 5 மணிக்கு சத்தாவர்ணம் என்ற மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.