பதிவு செய்த நாள்
27
பிப்
2015
11:02
வேலுார்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், 12 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு இறுதியில், மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. கடைசியாக, 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு இறுதியில், 27 கோடி ரூபாய் செலவில், மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கோயில் திருப்பணிகளில், பெரும்பாலானவற்றை செய்வதற்கு, நன்கொடையாளர்கள் முன்வந்துள்ளனர்.இந்நிலையில், கோயில் கோபுரங்கள், உள்பிரகாரங்களை பழமை மாறாமல் புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் நரசிம்மன், நேற்று முன்தினம் ஆய்வு நடத்தினார்.ராஜ கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், வள்ளால மகாராஜா கோபுரம் ஆகியவற்றின் சிற்பங்கள் மற்றும் கட்டுமான அமைப்புகளை ஆய்வு செய்த நரசிம்மன், ’அனைத்தையும், அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்’ என, அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.சிற்பங்களை புதுப்பொலிவு செய்வதற்காக, ரசாயன கலவைகளை பயன்டுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தினார்.’தொல்லியல் ஆய்வு குழுவினர், அறநிலையத் துறைக்கு சமர்ப்பிக்கும் அறிக்கை அடிப்படையில், கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள், விரைவில் துவங்கப்படும்’ என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.