பதிவு செய்த நாள்
27
பிப்
2015
11:02
மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமகத் தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று முன் தினம் இரவு, மாசிமகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கிராமசாந்தி பூஜை நடந்தது.
நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கும், உற்சவமூர்த்திக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், சிறப்பு அலங்காரம் செய்து வைத்திருந்த உற்சவ பெருமாள் சுவாமி முன், விழா அழைப்பிதழ் வாசிக்கப்பட்டது. யாகம் வளர்க்கப்பட்டு மூலவர், உற்சவர் சிலைகளுக்கும், அனைத்து அர்ச்சகர்களுக்கும் கங்கணம் கட்டப்பட்டது.காலை 10:00 மணிக்கு கருடாழ்வார் உருவம் பதித்த கொடியை யாகசாலையில் வைத்து, தச தரிசனமும், சிறப்பு பூஜைகளும் செய்தனர். பின், கொடியை கோவிலின் உள்ளே ஊர்வலமாக எடுத்து வந்து, கொடி மரத்தின் அடியில் உள்ள பெரியதிருவடி கருடாழ்வார் சிலை முன் வைத்து, ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி, வேதவியாசர் பட்டர், அர்ச்சகர்கள் திருமஞ்சன உபகாரங்களும், வேத மந்திரங்களையும் சேவித்தனர்.
தொடர்ந்து, காலை 11:10 மணிக்கு, 33 அடி உயரமுகள்ள கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது, அங்கிருந்த நுாற்றுக்கணக்கான தாசர்கள் சங்கு ஊதியும், சேகண்டி அடித்தும் கோவிந்தா, ரங்கா என கோஷமிட்டனர்.காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமகத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியதை, பறந்து சென்று பக்தர்களுக்கு அறிவிக்கும் வகையில், கொடியில் கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது, என்பது ஐதீகம்.இவ்விழாவில், முக்கிய பிரமுகர்கள், மிராசுதாரர்கள், முன்னாள் அறங்காவலர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இன்று இரவு சிம்ம வாகனத்திலும், 28ம் தேதி அனுமந்த வாகனத்திலும், மார்ச் 1ம் தேதி கருட வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடக்க உள்ளது. 2ல் பெட்டத்தம்மன் அழைப்பும், 3ம் தேதி காலை, 5.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், அன்று இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்க உள்ளது. தொடர்ந்து 4ம் தேதி காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் சுவாமி, தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை 3:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 5ம் தேதி குதிரை வாகனத்தில் பாரிவேட்டையும், 6ல் சேஷவாகனத்தில் தெப்பத்திருவிழாவும், 7ல் சாற்றுமுறை உற்சவமும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் நந்தகுமார், மேலாளர் ராமராஜ் மற்றும் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.