ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு ரூ.53.99 லட்சம் காணிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2015 11:02
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, 53 லட்சத்து 99 ஆயிரத்து 46 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். புகழ்பெற்ற அம்மன் கோவில்களில், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும் ஒன்று. இந்தக்கோவிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள், தங்களின் வேண்டுதலுக்காக காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். அதற்காக இந்த கோவில் வளாகத்தில், 16 நிரந்தர உண்டியல்களும், 6 தட்டு காணிக்கை உண்டியல்களும் வைக்கப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம். நேற்று காலை உண்டியல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் உதவி ஆணையர் கார்த்திக், இந்து சமய அறநிலைத்துறையின் கோவை மாவட்ட உதவி ஆணையர் ஜீவானந்தம், பொள்ளாச்சி ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. மொத்தம் உள்ள நிரந்தர 16 உண்டியல்களில், 39 லட்சத்து 929 ரூபாயும், தட்டுகாணிக்கை உண்டியலில், 14 லட்சத்து 98 ஆயிரத்து 117 ரூபாயும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். அக்கோவிலில் இந்தமாத உண்டியல் வருமானம் 53 லட்சத்து 99ஆயிரத்து 46 ரூபாய் இருந்தது. அம்மனுக்கு காணிக்கையாக 250 கிராம் தங்கம் மற்றும் 540 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வந்துள்ளது.