ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு சிறப்பு சக்தி உண்டு என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிபுண்ணியம் தேவநாத பெருமாள் கோவிலில் யோக நிலையில் உள்ள ஹயக்ரீவர் தேர்வுபயம் நீக்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வணங்கிவிட்டு தேர்வுக்கு சென்றால் நல்ல பலன் கிடைக்கிறது என்பதால் 10,12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர் இக்கோவிலுக்கு அதிக அளவில் வருகைதந்து பிரார்த்தனை செய்கின்றனர்.
இங்கு வரஇயலாத மாணவர்களுக்காக அவர்களின் சார்பில் தினமலர் ஆன்மீக மலர் சிறப்பு பிரார்த்தனை நடத்த இருப்பதால் உங்களது விண்ணப்பத்தை தினமலர் கூப்பன் மூலம் அனுப்ப கேட்டு இருந்தோம். மூன்று நாட்கள் வெளியான அந்த கூப்பனை பயன்படுத்தி பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூப்பன்கள் அனுப்பியிருந்தனர்.நிறைய பேர் கூப்பன்களை ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பியிருந்தனர்.மேலும் பலர் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான் பிரார்த்திப்பீர்களா? நான் உயர்கல்வி படிப்பிற்கான தேர்வு எழுதப்போகிறேன் எனக்காவும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சிலர் கூப்பன் அனுப்பியிருந்தனர். இப்படி சேர்ந்த அனைத்து கூப்பன்களையும் கடந்த 01/03/15 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஹயக்ரீவர் சன்னதிக்கு கொண்டு சென்று அவர் முன்பாகவைத்து சிறப்பு பூஜை செய்தோம்.கோவில் நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை நன்கு செய்து கொடுத்தனர். சிலர் கூப்பன்களுடன் காணிக்கையாக பணமும் ,காசோலையும் அனுப்பியிருந்தனர்.பணத்தை கோவில் உண்டியலிலும், காசோலையை கோவில் நிர்வாகத்திடமும் ஒப்படைத்துவிட்டோம். மாணவர்களே உங்கள் கூப்பனை ஹயக்ரீவரிடம் சமர்ப்பித்துவிட்டோம் இனி நீங்கள் ஹயக்ரீவர் துணையுடன் தேர்வுகளை பயமின்றி சந்தித்து சிறப்பு மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம்.